மென்பொருள்களில் (Softwares) கிரகங்களின்

மென்பொருள்களில் (Softwares) கிரகங்களின்
————————————————————————
ஸ்புடங்கள், நிலைகள் மாறுபடுவது ஏன்?
———————————————————————–
நேற்று Astro Rajasekaran எழுப்பிய கேள்விக்கு விடையாகவே இந்தப் பதிவை இடுகிறேன். எதிர்வரும் ஆகஸ்ட் 22 மற்றும் 24ம் தேதிகளில் புதன் குரு, செவ்வாய் சனி ஆகியோரது இணைவுகள் (Conjunction) ஏற்படுகின்றன. அதுபற்றிய அவரது பதிவில் அவரது மென்பொருள் குறிப்பிட்டிருக்கும் நேரத்திற்கும் நமது சபரி பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள நேரத்திற்கும் வித்தியாசம் வந்தது. இது எதனால்? மென்பொருட்கள் தவறான தகவல்களைத் தருகின்றனவா? என்ற அவரது கேள்விக்கு (கேள்வி அவருடையது என்றாலும் பதில் அனைவருக்கும் பயன்படும் என்பதால்) சில விளக்கங்களை இங்கே எனது டைம்லைனிலேயே தருகிறேன்.

மென்பொருட்களை உருவாக்கும்போது கீழ்க்கண்ட காரணிகள் அதன் துல்லியத்தை நிர்ணயிக்கின்றன. 1. எபிமெரிஸ் (Ephemeris Factor) 2. நேர வித்யாசம் (Time Factor)
3. இடமத்தியக் கொள்கை(Centric Factor)

1.எபிமெரிஸ் :
———————-
எபிமெரிஸ் என்பது கிரக நிலைகளைக் கணிப்பதற்கு பயன்படுவதாகும். இதில் பல அடிப்படை வகைகள் உள்ளன. Julian 1900, Bessalian 1950, Julian 2000 போன்றவை அவற்றில் குறிப்பிடத் தக்கவையாகும். இதில் அந்த மென்பொருள் எதை அடிப்படையாக வைத்துக் கணிக்கப்படுகிறதோ அதற்கேற்றபடி ஸ்புடங்கள், கிரக நிலைகள் மாறுபடும். இவை ஒவ்வொன்றிற்கும் சில திருத்தங்கள் உண்டு. அதை செய்யாமல் விடுவதால் இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன.

2. நேர வித்யாசம் :
—————————–
நேர நிர்ணயத்தைப் பொருத்தவரை யுனிவர்சல் டைம், டெரஸ்டிரியல் டைனமிக் டைம், எபிமெரிஸ் டைம் முதலிய பல நேர நிர்ணயங்கள் உள்ளன. அவற்றிற்கென்று சில திருத்தங்களும் உண்டு. அதனைச் சரியாகத் தேர்ந்தெடுக்காததாலும் தவறுகள் ஏற்படுகின்றன.

3. இடமத்தியக்கொள்கை :
——————————————
எந்த இடத்தை மத்தியமாகக் கொண்டு ஸ்புடங்களைக் கணிக்க வேண்டும் என்பதில் சில கொள்கை முறைகள் உள்ளன. பௌமத்தியக் கொள்கை, பூமத்தியக் கொள்கை, குறிப்பிட்ட இடமத்தியக் கொள்கை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இதில் அவர்கள் தேர்ந்தெடுக்கும் கொள்கையைப் பொருத்தும் ஸ்புடங்கள் மாறுபடும்.

இங்கே நான் சில தரவுகளைக் கொடுத்திருக்கிறேன். அதில் 22-08-2016ல் புதனும் குருவும் ஒன்றாக இணையும் நேரத்திற்கும், 24-08-2016ல் செவ்வாயும் சனியும் ஒன்றாக இணையும் நேரத்திற்கும் நமது சபரி பஞ்சாங்கம் மற்றும் மென்பொருளில் கணிக்கப்பட்ட ஸ்புடத்திற்கும் இதர முறைப்படி கணிக்கப்பட்ட ஸ்புடத்திற்கும் உள்ள வேறுபாடுகளை நீங்கள் காணலாம். அதுமட்டுமின்றி அந்த நேரத்திற்கு நாசாவின் எபிமெரிசில் கொடுக்கப்பட்டுள்ள ஸ்புடங்களையும் கொடுத்திருக்கிறேன். நாசாவிற்கும் நமது கணிதத்திற்கும் எவ்வளவு ஒற்றுமை இருக்கிறது என்பதைப் பார்த்தாலே நமது பஞ்சாங்கம் மற்றும் மென்பொருளின் துல்லியத்தை நீங்கள் தெளிவாக உணர்ந்துகொள்ள முடியும்.

https://m.facebook.com/story.php?story_fbid=609013162581933&id=100004197633275

திருப்பதி ஏழுமலையான் கோயில்

திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும்.

காலையில் சுவாமியை எழுப்புவதற்கு 2 அர்ச்சகர்கள், 2 ஊழியர்கள், தீப்பந்தம் பிடிக்கும் ஒருவர், வீணை வாசிக்கும் ஒருவர் என 6 பேர் சன்னதி முன்னால் உள்ள தங்க வாசலுக்கு வந்து சேருவார்கள்.

முதலில் துவார பாலகர்களுக்கு நமஸ்காரம் செய்வார்கள்.

பின்னர் அர்ச்சகர் ஒரு ஊழியரிடம் சாவியை வாங்கி சன்னதியை திறப்பார்.

பின்னர் சுவாமியை வணங்கிவிட்டு சன்னதி கதவை சாத்திவிட்டு உள்ளே செல்வார்கள்.

அந்நேரத்தில் “”கௌசல்யா சுப்ரஜா ராம… என்ற சுப்ரபாதம் வெளியே நிற்கும் ஒரு குழுவினரால் பாடப்படும்.

சன்னதிக்குள் தீப்பந்தம் கொண்டு செல்பவர் அங்குள்ள விளக்குகளை எல்லாம் ஏற்றுவார்.

பின்னர் வீணையை இசைக்க, வெங்கடாசலபதி அருகில் “போக ஸ்ரீனிவாச மூர்த்தி” பெருமாள் விக்ரஹத்தைக் கொண்டு வந்து அமர்த்துவார்கள்.

அவரை முதல் நாள் இரவில் ஒரு தொட்டிலில் படுக்க வைத்திருப்பார்கள்.

அந்த தொட்டிலிலிருந்து சுவாமியை எடுத்து மூலவர் அருகில் அமரவைப்பர்.

சுப்ரபாதம் பாடி முடித்ததும் சன்னதி திறக்கப்படும்.
சுவாமிக்கு பாலும் வெண்ணெயும் படைத்து “நவநீத ஹாரத்தி எனப்படும் தீபாராதனை செய்யப்படும்.
“விஸ்வரூப தரிசனம் என்றும் இதை சொல்வதுண்டு.

இந்த சேவையைக் காண ஒரு நபருக்கு கட்டணம் ரூ.120/-.

மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள்.

திருப்பதி மலையிலுள்ள ஆகாய கங்கை தீர்த்தத்திலிருந்து மூன்று குடங்களில் புனிதநீர் வந்துசேரும்.

ஒரு குடம் நீரை காலை பூஜைக்கும், மற்றொன்றை மாலை பூஜைக்கும், இன்னொன்றை இரவு பூஜைக்கும் எடுத்து வைப்பார்கள்.
(பிரம்மோற்ஸவ காலத்தில் மட்டும் யானைமீது தீர்த்தம் எடுத்து வரப்படும்).

ஒரு குடம் தண்ணீரை ஐந்து வெள்ளி பாத்திரங்களில் நிரப்புவார்கள்.

பின்னர் உத்தரணி (ஸ்பூன் போன்றது)யில் தண்ணீர் எடுத்து சுவாமி முன்பு அர்ச்சகர் நீட்டுவார்.

சுவாமி அதில் முகத்தை அலம்பிக் கொள்வார் என்பது ஐதீகம்.

பின்னர் மீதி உள்ள தண்ணீரை சுவாமியின் பாதத்தில் அபிஷேகம் செய்வார்கள்.

முழு மூர்த்திக்கும் அபிஷேகம் நடப்பதில்லை.

மூலவருக்கு பதிலாக அருகிலுள்ள போக ஸ்ரீனிவாச மூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்படும்.

அப்போது சுவாமியின் இடுப்பில் ஒரு துண்டை கட்டி வாசனை தைலம் தேய்த்து, மஞ்சள் கலந்த நீரால் அபிஷேகம் நடத்துவார்கள்.

பிறகு பசும்பால், சந்தனம், தேன், மீண்டும் மஞ்சள் தண்ணீர் என வரிசையாக அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு பிறகு வஸ்திரம் சாத்தப்படும்.

சுவாமிக்கு நெற்றியில் நாமம் இடுவார்கள். பிறகு அவர் முன்னால் கண்ணாடியை காட்டுவார்கள்.

குடை பிடித்து, சாமரத்தால் விசிறுவார்கள்.
இதன்பிறகு தீபாராதனை நடக்கும்.

இத்துடன் காலை சுப்ரபாத பூஜை நிறைவடையும்.

🙏சுப்ரபாத பூஜையை அடுத்து, காலை 3.30 முதல் 3.45 வரை சன்னதியை திரை போட்டு மறைத்து, சுத்தி எனப்படும் தூய்மை செய்யும் பணி நடக்கும்.

அந்த நேரத்தில் முதல் நாள் சுவாமிக்கு அணிந்த மாலைகளை கோயிலுக்கு பின்னால் உள்ள பூக் கிணறில் கொண்டு சேர்ப்பார்கள்.

பின்னர் புதிய மாலைகள் சுவாமிக்கு கொண்டு வரப்படும். இதைக் கொண்டுவர ஜீயங்கார் என்பவர் உள்ளார்.
ஜீயங்காருக்கு உதவியாக ஏகாங்கி என சொல்லப்படுபவர் இருக்கிறார்.

ஜீயங்கார் முன்னால் நடக்க ஏகாங்கி பின்னால் வருவார். கூடவே முரசு வாத்தியத்துடன் ஒருவர் செல்வார்.

இவர்களுக்கு பின்னால் பள்ளி எழுச்சி பாட இருவர், திருப்பாவை பாட இருவர், புருஷ ஸுக்தம் சொல்ல இருவர் என ஒரு கோஷ்டியே திரண்டு வரும்.

பூ கட்டுவதற்கு என “யமுனாதுறை” என்ற இடம் கோயிலில் இருக்கிறது. அங்கிருந்து பூமாலைகள் சுவாமிக்கு அணிவதற்காக எடுத்து வரப்படும்.

காலை 3.45 மணிக்கு “தோமாலை சேவை” ஆரம்பமாகும்.

சன்னதிக்கு பூக்கூடை வந்தவுடன் அர்ச்சகர் சுவாமியின் மார்பில் இருக்கும் மகாலட்சுமிக்கு முதலில் பூச்சரத்தை சாத்துவார்.

பின்னர் சுவாமிக்கு மாலைகள் சாத்தப்படும்.

பெருமாளுக்கு மாலை சாத்தி முடித்து அடுக்கு தீபாராதனை செய்யப்படும். இதற்கு 25 நிமிடம் ஆகும்.

அதுவரை ஜீயங்காரும் மற்றவர்களும் திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை பாசுரங்களை பாடுவார்கள்.

இதை பார்ப்பதற்கு ஒரு நபருக்கு கட்டணம் ரூ.220.
இதற்கும் மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும்.

இந்த சேவை ராமானுஜர் காலத்தில், “தோள் மாலை சேவை என சுத்த தமிழில் அழைக்கப்பட்டது.

பின்னர் தெலுங்கில் “தோமாலா சேவா என மாறிவிட்டது.

🙏கொலுவு தர்பார்:
ஏழுமலையான் கோயிலில் தோமாலை சேவை காலை 4.30 மணிக்கு நிறைவுபெறும்.

இதையடுத்து கொலுவு நிகழ்ச்சி 15 நிமிடங்கள் நடக்கும்.

இதற்காக உள்ள “கொலுவு ஸ்ரீநிவாச மூர்த்தி” விக்ரகம் ஏழுமலையான் சன்னதிக்குள் இருக்கிறது.

இந்த விக்ரகத்தை வெள்ளி பல்லக்கில் வைத்து, வெள்ளி குடை பிடித்து சன்னதியில் இருந்து வெளியில் எடுத்து வருவர்.

ஒரு மறைவிடத்தில் வைத்து, எள்ளுப்பொடி, வெல்லம், வெண்ணெய் நைவேத்தியம் செய்து அர்ச்சனை நடத்தி ஆரத்தி காட்டுவர்.

பிறகு அர்ச்சகர் ஒரு பஞ்சாங்கத்தை பிரித்து, அன்றைய நாள், நட்சத்திரம், திதி உள்ளிட்ட விவரங்களை வாசிப்பார்.

அதன்பிறகு முதல்நாள் உண்டியலில் எவ்வளவு பணம் சேர்ந்தது, தங்கம், வெள்ளி வரவு ஆகிய விபரங்களை சுவாமியிடம் சொல்வர்.

மூலவரே கொலுவு ஸ்ரீநிவாசமூர்த்தியின் வடிவில் வெளியே வருவதாக ஐதீகம் உண்டு.

மூலவரிடமே நேரடியாக கணக்கு வழக்குகளைச் சொல்வதாக நம்பிக்கை. இந்த காட்சியைக்காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

🙏🔔முதல் மணி:
அர்ச்சனாந்திர தரிசனம் முடிந்ததும், வெங்கடாசலபதிக்கு முதல் நைவேத்தியம் படைக்கப்படும். அப்போது இரண்டு மணிகள் ஒலிக்கப்படும்.

அவருக்கு முதலில் தயிர்சாதம் படைக்கப்படும்.

மூலவருடன் விஷ்வக்சேனர், கருடன் மற்றும் நித்யசூரிகளுக்கும் (முக்தி பெற்றவர்கள்) இதே நைவேத்தியம் படைக்கப்படும்.

🙏🔔🔔இரண்டாவது மணி: இதையடுத்து மீண்டும் மணி அடிக்கப்பட்டு 2வது முறையாக நைவேத்தியம் படைக்கப்படும்.

அப்போது வராக புராணத்தில் உள்ள 108 நாமாக்களை கொண்ட அஷ்டோத்திர நாமா வாசிக்கப்படும். இதை பக்தர்கள் யாரும் பார்க்க முடியாது.

ஆனால், சுவாமிக்கு நைவேத்தியம் செய்யப்படும் செருப்புலு மற்றும் பணியார வகைகள் ஒரு குறிப்பிட்ட அளவு பக்தர்களுக்கு மட்டும் பிரசாதமாக வழங்கப்படும்.

🙏சகஸ்ரநாம அர்ச்சனை:
கொலுவு தரிசனத்தை அடுத்து சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கும்.

விஷ்ணு சகஸ்ரநாமம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் வெங்கடாசலபதிக்கென தனியாக ஆயிரத்தெட்டு பெயர் சொல்லி சகஸ்ரநாமம் இருக்கிறது.

இதை செய்வதற்கு ஒரு நபருக்கு ரூ.120 கட்டணம். காலை 4.45 மணி முதல் 5.30 வரை இந்த அர்ச்சனை நடக்கும்.

நமது பெயர், குலம், கோத்திரம் ஆகியவற்றை முன் கூட்டியே சொல்லிவிட்டால் நமது பெயரில் அர்ச்சனை செய்வார்கள்.

இந்த தரிசனத்தின் போது பக்தர்களை அங்குள்ள ஊழியர்கள் யாரும் தள்ளி விட மாட்டார்கள்.

சகஸ்ரநாம அர்ச்சனை முடிந்து பூஜை நடத்தப்படும். இந்த பூஜைக்கு “அர்ச்சனாந்தர தரிசனம் என்று பெயர்.

இதை பார்க்க ஒரு நபருக்கு ரூ.200 கட்டணம். மூன்று மாதங் களுக்கு முன்பே பதிவு செய்துகொள்ள வேண்டும்.

காலை 5.30க்கு துவங்கும் இந்த பூஜை 6.30 மணி வரை நடக்கும்.

🙏சகஸ்ர தீப அலங்கார சேவை: ஊஞ்சல் மண்டபத்தில் தினமும் மாலை 5.30 மணிக்கு சகஸ்ர தீப அலங்காரம் (ஆயிரம் தீபங்கள்) செய்யப்படும். அப்போது அன்னமயா சங்கீர்த்தனம் பாடப்படும்.

இதற்கும் ஆயிரம் ரூபாய் கட்டணம் உண்டு. 5 பேர் பங்கேற்கலாம்.

அவர்களுக்கு வஸ்திரம் பிரசாதமாக வழங்கப்படும். திருமணமானவர்கள் இந்த வைபவத்தில் பங்கேற்பது சிறப்பானது.

🙏ஆபரணம் இல்லாத நாள்: வியாழக்கிழமைகளில் வெங்கடாசலபதிக்கு முக்கிய ஆபரணங்கள் எதுவுமின்றி வேட்டி மற்றும் வெல்வெட் அங்கி அணிவிக்கப் படும்.
அதன் மேல் அங்கவஸ்திரம் மட்டும் சாத்துவார்கள். இந்த நிகழ்ச்சிக்கு “சாலிம்பு என்று பெயர்.

மேலும் சுவாமிக்கு வழக்கமாக அணிவிக்கப்படும் திருநாமத்திற்கு பதிலாக நெற்றியின் மத்தியில் மெல்லிய நாமம் மட்டும் அணிவிக்கப்படும்.

🙏கல்யாண உற்சவம்:
திருப்பதி கோயிலில் உள்ள சம்பங்கி பிரகாரத்தில் திருமண ஹால் இருக்கிறது.

அங்கு உற்சவரான மலையப்ப சுவாமிக்கும் ஸ்ரீதேவி, பூதேவிக்கும் திருமணம் நடத்தப்படும்.

பதினைந்தாம் நூற்றாண்டில் இருந்து இந்த திருமணம் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

திருமண தடை உள்ள ஆண், பெண்கள் இந்த நிகழ்ச்சியில் முக்கியமாக கலந்துகொள்கிறார்கள்.

சுவாமிக்கும் தாயார்களுக்கும் மத்தியில் ஒரு திரை போடப் படும். பின்னர் அந்த திரை அகற்றப்பட்டு ஹோமங்கள் நடக்கும்.

ஒரு புரோகிதர் தாயார்களுக்கும் சுவாமிக்கும் திருமணம் செய்துவைப்பார்.

விழாக்காலங்களில் மட்டும் இந்த திருமணம் நிறுத்தி வைக்கப்படும்.

நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு இரண்டு லட்டு, ஐந்து வடை, ஒரு பட்டு அங்கவஸ்திரம் மற்றும் ரவிக்கைத் துணி பிரசாதமாக தரப்படும்.

கல்யாண வைபவம் ஒருமணி நேரம் நடக்கும். பகல் 12 மணிக்கு திருமண உற்சவம் துவங்கும்.

திருமண உற்சவத்திற்கு கட்டணம் ரூ.1000/-. இரண்டுபேர் அனுமதிக்கப்படுவார்கள்.

🙏ஊஞ்சல் சேவை:
மாலை 4 மணிக்கு கோயிலுக்கு வெளியே உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஊஞ்சலில் ஆடும் காட்சியை பார்க்கலாம். இதை “டோலாத்ஸவம் என்பர்.

அப்போது வேத பாராயணம் செய்யப்படுவதுடன் மங்கள வாத்தியங்களும் முழங்கும்.

ஆயிரம் ரூபாய் செலுத்தி ஐந்து பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.

அவர்களுக்கு 5 லட்டு, ஒரு அங்கவஸ்திரம் மற்றும் ரவிக்கைத்துணி தரப்படும்.

மாலை 5 மணிக்கு இந்த நிகழ்ச்சி நிறைவடையும்.

https://m.facebook.com/story.php?story_fbid=1833564313353126&id=100000987252226

குபேர எந்திர பூஜை

குபேர எந்திர பூஜை செய்யுங்கள்!

காசு, பணம், துட்டு, மணி, ரூபாய், டாலர், யூரோ எப்படிச் சொன்னாலும் சரி… எல்லோருக்கும் அவசியம் தேவைப்படுவது இதுதான்.
செல்வம் சேர்ந்துவிட்டால் மட்டும் போதாது. அது தேயாமல் பெருக வேண்டும். தொலையாத நிதியம் அதாவது கரையாமல் சேரும் செல்வம் வேண்டும் என்றுதான் அபிராமிபட்டரே அம்மனிடம் வேண்டுகிறார்.

உங்கள் வீட்டில் செல்வம் சேரவேண்டுமா? திருமகளின் பார்வையும் குபேரனின் அருளும் சேர்ந்து குறைவற்ற பொருட்செல்வத்தை நீங்கள் பெற வேண்டுமா?
இதோ அதற்கான எளிய பூஜை முறை உங்களுக்காகவே தரப்பட்டிருக்கிறது.
ஸ்லோகம் சொல்வது, மந்திரங்களைப் படிப்பது, சுற்றிச் சுற்றி வலம் வருவது, ஏராளமான பூஜைப் பொருட்களை வாங்குவது இப்படி எதுவும் இந்த பூஜைக்கு வேண்டாம். ஆனால் ஒரே ஒரு விஷயம் அவசியம் வேண்டும். அது உண்மையான பக்தியும், நம்பிக்கையுடனான வழிபாடும்தான். இவற்றுக்கு நீங்கள் உத்தரவாதம் தந்தால் போதும். உங்கள் வீட்டில் செல்வமகள் நிரந்த வாசம் செய்வாள் என்பது நிச்சயம்!
பூஜையைத் தொடங்குவதற்கு சில முன்னேற்பாடுகள் அவசியம். முதலாவது, நீங்கள் பூஜை செய்யப்போகும் நாளைத் தேர்ந்தெடுப்பது.
தொடர்ந்து ஒன்பது வாரம் அல்லது ஒன்பது மாதம் குறிப்பிட்ட தினத்தில் செய்யவேண்டிய பூஜை இது. எனவே ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமைகளில் அல்லது மாதம் ஒருநாள் பௌர்ணமி தினத்தில் செய்வது சிறப்பு. உங்களுக்கு உகந்த தினத்தைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
ஆண், பெண் என எவர் வேண்டுமானாலும் இதைச் செய்யலாம். அதே சமயம் பூஜையைத் தொடர்ந்து ஒருவரே செய்வது நல்லது. இயலாத சமயத்தில் அதே குடும்பத்தின் வேறு உறுப்பினர் செய்யலாம். குடும்பத்திலுள்ள எல்லோரும் கலந்து கொள்வது மிகச் சிறப்பானது.
இரண்டாவதாகி இந்த பூஜையை செய்திட ஒருமுறைக்கு ஒன்பது காசுகள் என, ஒன்பது தடவைக்குமாகச் சேர்த்து என்பத்தொரு நாணயங்கள் அவசியம். ஒரு ரூபாய் முதல் உங்கள் வசதிக்கு ஏற்ற தொகை வரையான காசைப் பயன்படுத்தலாம். இதில் முக்கியமான விஷயம் எண்பத்தொரு காசுகளும் சம மதிப்பு உடையவையாக இருக்க வேண்டும் என்பதுதான். உதாரணமாக ஒரு ரூபாய் நாணயத்தைப் பயன்படுத்த முடிவு செய்தால் எண்பத்தொரு ஒரு ரூபாய் நாணயங்கள் தேவை.

இதேபோல் உங்கள் வசதிக்கு ஏற்ப எண்பத்தொரு காசுகளை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அவ்வளவுதான், நீங்கள் குபேர யந்திர பூஜை செய்யத் தயாராகிவிட்டீர்கள்.
வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி தினம் என நீங்கள் பூஜை செய்யத் தேர்வு செய்த நாளில், அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு உங்கள் வீட்டு பூஜை அறையில் குலதெய்வத்தை மனதார வேண்டி தீபம் ஏற்றுங்கள்.
அடுத்து, செய்யும் பூஜை தடைபடாமல் நடக்கவும், குறைவிலா செல்வம் குறையற்ற வழியில் சேர்ந்திடவும் மகாகணபதியை மனதாரத் துதியுங்கள்.

அந்த நாளில் நல்ல நேரத்தில் உங்கள் வீட்டு பூஜையறையில் ஒரு பலகையின் மீது முன்பக்கம் படத்தில் தரப்பட்டிருப்பது போன்று ஒரு கட்டத்தை வரைந்து, எண்களையும் எழுதுங்கள். இந்தக் கட்டத்தை குங்குமத்தால் வரைவதும், எண்களை அரிமாவால் எழுதுவதும் சிறந்தது. திருமகளைக் குறிக்கும் விதமாக எழுதப்பட்டுள்ள “ஸ்ரீ’ எனும் எழுத்தை மஞ்சள் பொடியால் எழுதலாம். இதுவே குபேர யந்திரக் கோலம். அடுத்து, கட்டங்களில் எழுதப்பட்டுள்ளது எழுத்துக்களுக்குப் பக்கத்தில் கட்டத்திற்கு ஒன்று வீதம் ஒன்பது நாணயங்களை வையுங்கள். எழுத்தை அழித்தோ, மறைத்தோ வைக்கக்கூடாது. எனவே யந்திரத்தை வரையும் போதே அதற்கு ஏற்றபடி வரைந்து கொள்ளுங்கள்.

நாணயம் மகாலட்சுமிக்கு அடையாளம் இப்போது குபேர யந்திரத்தில் திருமகள் எழுந்தருளியிருப்பதாக ஐதிகம்.
இனி, லட்சுமி குபேர் யந்திரத்தை நீங்கள் பூஜிக்க கொஞ்சம் உதிரி பூக்களை யுடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
யந்திரத்தின் முன் நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஒன்றினை ஏற்றிவையுங்கள்.

“தாயே மகாலட்சுமி, மனதார உன்னை வணங்கும் எங்கள் மனையில் மங்களங்கள் யாவும் பெருக வேண்டும். மங்காத செல்வம் சேரவேண்டும். என்றென்றும் உன்னரும் நீங்காது இருக்க வேண்டும்!’ என்று மனதார வேண்டுங்கள்.

மகாலட்சுமியே போற்றி! மங்கள லட்சுமியே போற்றி! தீபலட்சுமியே போற்றி! திருமகள் தாயே போற்றி! அன்னலட்சுமியே போற்றி! கிருக லட்சுமியே போற்றி! நாரண லட்சுமியே போற்றி! நாயகி லட்சுமியே போற்றி! ஓம் குபேர லட்சுமியே போற்றி போற்றி!

என்று சொன்னவாறே சிறிய பூவை நீங்கள் வரைந்திருக்கும் குபேர யந்திரத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் போடுங்கள்.

வளம் யாவும் தந்திடுவாய் வைஸ்ரவணா போற்றி!
குலம் செழிக்கச் செய்திடுவாய் குபேரனே போற்றி!
செல்வங்கள் தந்திடுவாய் சிவன் தோழா போற்றி!
உளமாரத் துதிக்கின்றோம் உத்தமனே போற்றி போற்றி!
இந்தத் துதியைச் சொல்லி குபேரனைக் கும்பிடுங்கள்.

தூப, தீபம் காட்டுங்கள். சர்க்கரை கலந்த பால் அல்லது பால் பாயசம் நிவேதனம் செய்யுங்கள்.
அவ்வளவுதான். பூஜை செய்தாயிற்று. அன்று மாலை உங்களால் இயன்ற அளவுக்கு மங்களப் பொருள்களை பிறருக்கு வைத்துக் கொடுங்கள். வசதி குறைவாக இருப்பின் இதனை ஒன்பதாவது வார முடிவில் தந்தாலும் போதும்.
பூஜை செய்த அன்று மாலை ஏதாவதொரு பெருமாள் கோயிலுக்குச் சென்று தாயாரை தரிசியுங்கள். மறுநாள், குபேர யந்திரத்தில் வைத்து பூஜித்த காசுகளை எடுத்து பத்திரப்படுத்தி வையுங்கள். ஒரு துணியை நனைத்து அதனால் குபேர யந்திரக் கோலத்தைத் துடைத்து விடுங்கள்.

அடுத்த வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி நாளில் முன்புபோலவே குபேர யந்திரம் வரைந்து வேறு காசுகளை வைத்து பூஜித்து, மாலையில் கோயிலுக்குச் செல்வதுவரை எல்லாவற்றையும் செய்யுங்கள்.
இப்படி ஒன்பது வெள்ளிக்கிழமைகள் அல்லது ஒன்பது பௌர்ணமிகள் பூஜை செய்து முடித்ததும், அடுத்து வரும் வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி அன்று, சேர்ந்திருக்கும் எண்பத்தொரு காசுகளையும் எடுத்துக் கொண்டு சென்று ஏதாவது ஒரு சிவன் கோயில் உண்டியலிலோ அல்லது பெருமாள் கோயிலில் தாயார் சன்னதியில் உள்ள உண்டியலிலோ செலுத்துங்கள்.

(சிவபெருமானே குபேரனுக்கு எல்லா செல்வஙகளையும் அளித்தவர். அதோடு அவனை நண்பனாகவும் ஏற்றவர். எனவேதான் சிவாலயத்திலும் செலுத்தலாம்!)
அன்றையதினம் உங்களால் இயன்ற அளவு மங்களப் பொருட்களை பெண்களுக் வைத்துக் கொடுங்கள். அன்றைய தினம் மகாலட்சுமியே ஏதாவது ஒரு உருவில் அதனை பெற வருவாள் என்பது நம்பிக்கை. எனவே, குறைவாகக் கொடுத்தாலும் மனதாரக் கொடுங்கள்.

ஒன்பதாவது வார (மாத) பூஜை முடிந்த நாள் முதல் உங்கள் வீட்டில் நிச்சயம் செல்வவளம் சேரும். நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் நிறையும். வருடத்துக்கு ஒருமுறை இந்த லட்சுமி குபேர யந்திர பூஜையைச் செய்யுங்கள். குறையாத செல்வதும், நிறைவான நிம்மதியான வாழ்வும் நிச்சயம் கிட்டும்.

நன்றி
Baskaran Sankar

https://m.facebook.com/story.php?story_fbid=867882623338087&id=100003490720968

60 தமிழ் வருடங்கள்

சிவமயம் சிவாயநம

60 தமிழ் வருடங்கள் பெயர்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

01. பிரபவ – நற்றோன்றல்
Prabhava1987-1988

02. விபவ – உயர்தோன்றல்
Vibhava 1988–1989

03. சுக்ல – வெள்ளொளி
Sukla 1989–1990

04. பிரமோதூத – பேருவகை
Pramodoota 1990–1991

05. பிரசோற்பத்தி – மக்கட்செல்வம்
Prachorpaththi 1991–1992

06. ஆங்கீரச – அயல்முனி
Aangirasa 1992–1993

07. ஸ்ரீமுக – திருமுகம்
Srimukha 1993–1994

08. பவ – தோற்றம்
Bhava 1994–1995

09. யுவ – இளமை
Yuva 1995–1996

10. தாது – மாழை
Dhaatu 1996–1997

11. ஈஸ்வர – ஈச்சுரம்
Eesvara 1997–1998

12. வெகுதானிய – கூலவளம்
Bahudhanya 1998–1999

13. பிரமாதி – முன்மை
Pramathi 1999–2000

14. விக்கிரம – நேர்நிரல்
Vikrama 2000–2001

15. விஷு – விளைபயன்
Vishu 2001–2002

16. சித்திரபானு – ஓவியக்கதிர்
Chitrabaanu 2002–2003

17. சுபானு – நற்கதிர்
Subhaanu 2003–2004

18. தாரண – தாங்கெழில்
Dhaarana 2004–2005

19. பார்த்திப – நிலவரையன்
Paarthiba 2005–2006

20. விய – விரிமாண்பு
Viya 2006–2007

21. சர்வசித்து – முற்றறிவு முழுவெற்றி
Sarvajith 2007–2008

22. சர்வதாரி – முழுநிறைவு
Sarvadhari 2008–2009

23. விரோதி – தீர்பகை
Virodhi 2009–2010

24. விக்ருதி – வளமாற்றம்
Vikruthi 2010–2011

25. கர – செய்நேர்த்தி
Kara 2011–2012

26. நந்தன – நற்குழவி
Nandhana 2012–2013

27. விஜய – உயர்வாகை
Vijaya 2013–2014

28. ஜய – வாகை
Jaya 2014–2015

29. மன்மத – காதன்மை
Manmatha 2015–2016

30. துன்முகி – வெம்முகம்
Dhunmuki 2016–2017

*31. ஹேவிளம்பி – “பொற்றடை”*
*Hevilambi 2017–2018*

32. விளம்பி – அட்டி
Vilambi 2018–2019

33. விகாரி – எழில்மாறல்
Vikari 2019–2020

34. சார்வரி – வீறியெழல்
Sarvari 2020–2021

35. பிலவ – கீழறை
Plava 2021–2022

36. சுபகிருது – நற்செய்கை
Subakrith 2022–2023

37. சோபகிருது – மங்கலம்
Sobakrith 2023–2024

38. குரோதி – பகைக்கேடு
Krodhi 2024–2025

39. விசுவாசுவ – உலகநிறைவு
Visuvaasuva 2025–2026

40. பரபாவ – அருட்டோற்றம்
Parabhaava 2026–2027

41. பிலவங்க – நச்சுப்புழை
Plavanga 2027–2028

42. கீலக – பிணைவிரகு
Keelaka 2028–2029

43. சௌமிய – அழகு
Saumya 2029–2030

44. சாதாரண – பொதுநிலை
Sadharana 2030–2031

45. விரோதகிருது – இகல்வீறு
Virodhikrithu 2031–2032

46. பரிதாபி கழிவிரக்கம்
Paridhaabi 2032–2033

47. பிரமாதீச – நற்றலைமை
Pramaadhisa 2033–2034

48. ஆனந்த – பெருமகிழ்ச்சி
Aanandha 2034–2035

49. ராட்சச – பெருமறம்
Rakshasa 2035–2036

50. நள – தாமரை
Nala 2036–2037

51. பிங்கள – பொன்மை
Pingala 2037–2038

52. காளயுக்தி – கருமைவீச்சு
Kalayukthi 2038–2039

53. சித்தார்த்தி – முன்னியமுடிதல்
Siddharthi 2039–2040

54. ரௌத்திரி – அழலி
Raudhri 2040–2041

55. துன்மதி – கொடுமதி
Dunmathi 2041–2042

56. துந்துபி – பேரிகை
Dhundubhi 2042–2043

57. ருத்ரோத்காரி – ஒடுங்கி
Rudhrodhgaari 2043–2044

58. ரக்தாட்சி – செம்மை
Raktakshi 2044–2045

59. குரோதன – எதிரேற்றம்
Krodhana 2045–2046

60. அட்சய – வளங்கலன்
Akshaya 2046–2047

60 ஆண்டின் தமிழ்ப் பெயர்களை இங்கு வழங்கியுள்ளோம்.

இனி எந்த தங்குத்தடையும் இன்றி, 60 தமிழ் வருடங்களை தமிழ்ப்பெயரோடு தமிழ் புத்தாண்டை கொண்டாடி மகிழ்வோம்.

திருச்சிற்றம்பலம்

இப்படிக்கு சிவனடிசீரே பரவுவார் சிவ.சுப்பிரமணி சைவ சித்தாந்த சபை ஒசூர்.

உள்ளம் அமைதி பெற

உள்ளம் அமைதி பெற 10 கொள்கைகள்:

1. உதவி கேட்கப்படாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாதீர்கள்:.

நம்மில் பெரும்பாலோர் மற்றவர்களின் விருப்பங்களில் அடிக்கடி தலையிடுவதன் மூலமே தமக்குத் தாமே பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கின்றனர்.

நம் வழி மிகச் சிறந்தவழி, நமது லாஜிக்கே பரிபூரணமான லாஜிக் என தமக்குத் தாமே நம்பிக்கொண்டு யாரெல்லாம் நமது சிந்தனைகளுக்கு ஒத்துப் போகவில்லையோ

அவர்களெல்லாம் கண்டிப்பாக விமர்சிக்கப்பட்டு சரியான வழியான நம் வழிக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என நினைப்பதாலேயே இவ்வாறு நாம் மற்றவர்களின் பிரச்சனைகளில் அதிகப்படியாக மூக்கை நுழைக்கிறோம்.

இத்தகைய சிந்தனை தனித்துவத்தின் இருப்பை நிராகரிக்கின்றது. இதன் பயன், கடவுளின் இருப்பை மறைமுகமாக நிராகரிக்கிறது.

ஏனெனில், கடவுள் ஒவ்வொருவரையும் அவரவருக்கான தனித்துவம்-தனித்தன்மையுடனே படைத்துள்ளார்.

மிகச் சரியாக ஒன்று போல் சிந்தித்து ஒன்று போல் செயல்படும் எந்த இரு மனிதர்களையும் காண இயலாது. அவ்வாறு ஆக்கவும் முடியாது.

எல்லா ஆணும் பெண்ணும் அவரவர்களுக்கான வழிகளிலேயே செயல்படுகின்றனர்; ஏனெனில், ஒவ்வொருவரினுள்ளும் கடவுள் அவரவரின் வழியிலேயே செல்ல தூண்டுகிறார்.

உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்; அதன் மூலம் உங்கள் மனதை அமைதியாக வையுங்கள்!

2. மன்னியுங்கள்; மறந்து விடுங்கள்!

மன அமைதிக்கு இது மிக சக்தி வாய்ந்த மருந்தாகும். சாதாரணமாக யாராவது நம்மை நோகடித்தாலோ அவமானப்படுத்தினாலோ நமக்குத் தீங்கு விளைவித்தாலோ அவர்கள் மீது தவறான எண்ணங்களை நம் மனதில் வளர்த்துக் கொள்கிறோம்.

நாம் மனக்குறைப்பாட்டுக்கு நம் மனதை நம்மை அறியாமலே பயிற்றுவிக்கிறோம். இது தூக்கமின்மை, வயிற்று அல்சர் மற்றும் இரத்த அழுத்தம் போன்றவை உருவாக காரணமாகிறது.

இத்தகைய அவமானப்படுத்துதல் அல்லது ரணப்படுத்துதல் ஒரு முறை நிகழ்ந்தால், அவற்றைத் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொள்வதால் மற்றவர் மீதான மனக்குறைபாடு நிரந்தரமாகிறது.

இந்தத் தவறான பழக்கத்துக்கு முடிவு கட்டுவோம். மிகக் குறுகிய இவ்வாழ்வில் எதற்காக இத்தகைய சிறிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

மறப்போம்; மன்னிப்போம்; முன் செல்வோம். மன்னிப்பதன் மூலமும் கொடுப்பதன் மூலமும் அன்பை வளப்படுத்திக் கொள்வோம்.

3. அங்கீகாரத்திற்காக அலையாதீர்!

இவ்வுலகம் முழுக்க சுயநலவாதிகளே நிறைந்துள்ளனர். அவர்கள் தங்களின் சொந்தத் தேவைக்காகவே எப்போதாவது மற்றவர்களைப் பாராட்டுகின்றனர்-புகழ்கின்றனர்.

அவர்கள் ஒருவேளை இன்று உங்களைப் புகழலாம் – அவர்களுக்குத் தேவையானதைக் கொடுக்கும் சக்தி உங்களுக்கு இருப்பதால்.

ஆனால், ஒருவேளை வெகு சீக்கிரத்திலேயே நீங்கள் ஒன்றுமில்லாதவராக ஆகலாம்; அப்போது, உங்களின் சாதனைகளை அவர்கள் மறப்பதோடு, உங்களிடம் தவறுகளைக் கண்டுபிடிக்க ஆரம்பிப்பார்கள்.

இத்தகையவர்களின் அங்கீகாரத்திற்காக கடுமையாக முயற்சி செய்து, உங்களை நீங்களே ஏன் சாகடிக்க வேண்டும்?

அவர்களின் அங்கீகாரம் கேடு விளைவிப்பதை விட பெறுமதியானதல்ல!

நேர்மையாகவும் நன்னோக்கத்தோடும் உங்கள் வேலையைச் செய்து கொண்டிருங்கள்; அதற்கான அங்கீகாரத்திற்காக ஏங்காதீர்கள்.

4. பொறாமை கொள்ளாதீர்!

வயிற்றெரிச்சல் (பொறாமை) கொள்வது நம் அமைதியான மனதை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதில் நாம் அனைவருமே அனுபவம் உள்ளவர் தான்

! உங்கள் அலுவலகத்தில் உடன் பணி செய்பவரை விட நீங்கள் கடின உழைப்பாளி என்பது உங்களுக்குத் தெரியும்; ஆனால், சிலவேளைகளில் அவர்களுக்குப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கலாம்; உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம்.

பல ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கிய உங்கள் தொழிலில் உங்களுக்குக் கிடைத்த வெற்றியை விட பல மடங்கு, தொழில் துவங்கி ஒரு ஆண்டே ஆன உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்குக் கிடைக்கலாம்.

இது போன்று நம் தினசரி வாழ்வில் பல உதாரணங்களைக் காணமுடியும். இவற்றுக்காக நீங்கள் பொறாமை-வயிற்றெரிச்சல் கொள்ளலாமா? கூடாது!

நினைவில் கொள்ளுங்கள்: ஒருவரின் தினசரி வாழ்வு அவரின் விதியால் பரிணாமம் பெறுவதோடு, அதுவே அவரின் இப்போதைய நிஜமாகவும் ஆகிறது.

நீங்கள் பணக்காரராக ஆகவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால், இந்த உலகில் எதுவுமே அதனைத் தடுக்க முடியாது.

நீங்கள் பணக்காரராக ஆவது விதிக்கப்பட்டிருக்கவில்லையேல், அவ்வாறு ஆவதற்கு எதுவுமே உதவவும் செய்யாது. உங்களின் பேறின்மைக்கு மற்றவர்களைப் பழிப்பதால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை.

பொறாமை-வயிற்றெரிச்சல் உங்களை எங்குமே கொண்டு சேர்க்காது; அது உங்களின் மன அமைதியைக் கெடுப்பது அல்லாமல்!

5. சூழலுக்குத் தகுந்து உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்!

உங்கள் சுற்றுப்புறத்தை நீங்கள் தனியாக மாற்ற முயற்சி செய்தால் நீங்கள் தான் தோற்றுப்போவீர்கள். அதற்கு மாற்றாக, உங்கள் சுற்றுப்புறத்துக்குத் தகுந்தாற் போல் வாழ உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்

. அவ்வாறு நீங்கள் செய்தால், உங்களுக்குத் தோழமையாக இல்லாத அந்தச் சுற்றுப்புறத்தில் கூட அதிசயகரமான மாற்றத்தையும் இனிமையான உங்களுக்கு ஒத்துப்போகும் நிலையையும் காண்பீர்கள்.

6. உங்களால் குணமாக்க முடியாததைச் பொறுத்துக் கொள்ளுங்கள்!

இது தீமையை நன்மையாக்குவதற்கான அருமையான வழியாகும். தினசரி நம் கட்டுப்பாட்டில் இல்லாத எண்ணற்ற தொல்லைகள், நோய்கள், எரிச்சல்கள் மற்றும் விபத்துகளை நாம் சந்திக்கின்றோம்.

நம்மால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் போனாலோ அல்லது அவற்றை மாற்ற இயலாமல் போனாலோ அவற்றை எதிர்கொள்வது எவ்வாறு என்று நாம் கண்டிப்பாக பயில வேண்டும்

. அவற்றை நாம் மலர்ச்சியாக சகித்துக் கொள்வதைப் பயில வேண்டும். உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள்; அது பொறுமை, உள்சக்தி மற்றும் மன உறுதியை உங்களுக்கு வழங்கும்.

7. சக்திக்கு மீறிய செயலைச் செய்யாதீர்!

இந்த முக்கியமான தேவையை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்தல் நன்று. நாம் அடிக்கடி நம்மால் செய்ய இயலும் அளவுக்கு மீறிய அதிகப்படியான பொறுப்புகளை எடுத்துக் கொள்கிறோம்.

இது நமது தன்முனைப்பு-செருக்கைத் திருப்தி படுத்துகிறது. உங்களின் வரம்பு என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதிகப்படியான கவலைகளை அளிக்கவல்ல அதிகச் சுமைகளை நாம் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்?

உங்களின் புறச்செயல்பாடுகளை அதிகப்படுத்திக் கொள்வதால் மன அமைதியை அடையமாட்டீர்கள். உலகத்துடனான (பொருள்முதல்வாதத்துடனான) தொடர்பைக் குறைத்துக் கொண்டு, வணக்கங்கள், தியானம், தன்னிலை ஆய்வு போன்றவற்றில் அதிக நேரம் செலவழியுங்கள்

. இது ஓய்வற்ற உங்கள் மன எண்ணங்களைக் குறைக்கும். சுமைகள் குறைந்த மனம், அதிக மன அமைதியை உருவாக்கும்.

8. ஒழுங்காக தியானம் செய்வதைப் பழக்கமாக்குங்கள்

தியானம் – உள்மன ஆய்வு – மனதுக்கு அமைதி தருவதோடு, தொந்தரவு தரும் எண்ணங்களிலிருந்து விடுவிக்கவும் செய்கிறது. இது அமைதியான மனதின் அதிஉயர் நிலையாகும்.

தியானம் செய்வதற்குத் தன்னைத் தானே முயன்று பழகிக்கொள்ளுங்கள். தினசரி குறைந்தது அரைமணி நேரமாவது உள்ளார்ந்தமாக தியானம் செய்ய முடிந்தால், உங்கள் மனம் அடுத்த இருப்பத்து மூன்றரை மணி நேரத்துக்கு அமைதியடைவதற்கு உத்தரவாதமே வழங்கலாம்.

அத்தகைய ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், முன்பு உள்ளதைப் போன்று உங்கள் மனம் அவ்வளவு இலகுவாக தொந்தரவு அடையாது.

சிறிது சிறிதாக தியானம் செய்வதன் அளவைத் தினசரி அதிகரித்துக் கொண்டால், அதன் பயனை அடைந்துக் கொள்ளலாம்.

ஒருவேளை இது உங்களின் தினசரி வேலைகளில் தலையிடுவதாக எண்ணலாம். அதற்கு மாறாக, இது உங்களின் திறமையை அதிகரிக்க வைப்பதோடு, மிகக் குறுகிய காலத்தில் நல்ல விளைவுகளை உருவாக்க உங்களால் முடியும்.

9. உள்ளத்தை வெற்றிடமாக ஒருபோதும் விடாதீர்கள்!

வெற்றிடமான மனம் சாத்தானின் பயிற்சிகளம்! எல்லா தீய பழக்கங்களும் வெற்றிடமான மனங்களிலிருந்தே உருவாகின்றன

. உங்கள் உள்ளத்தைச் சில நேர்மறை எண்ணங்களாலும் பயனுள்ள விஷயங்களாலும் நிறைத்து வையுங்கள். சுறுசுறுப்பாக உங்கள் பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள்.

உங்கள் விருப்பம் சார்ந்த விஷயத்தில் ஏதாவது செய்யுங்கள். பணமா? அல்லது அமைதியான உள்ளமா? இதில் எது உங்களிடம் அதிக பெறுமதியானது என்பதைக் கண்டிப்பாக நீங்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

சமூகப்பணி அல்லது மதப்பணி போன்ற உங்களின் பொழுதுபோக்குகளில் பெரும்பாலும் நீங்கள் அதிகப் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது.

ஆனால், நீங்கள் மனநிறைவையும் சாதித்த திருப்தியையும் அடைய முடியும். உடல் ஓய்வு எடுக்கும் நேரங்களில் கூட, ஆரோக்கியமான வாசிப்பிலும் கடவுளின் பெயரை உளப்பூர்வமாக கண்ணை மூடி உச்சரிப்பதிலும் உங்கள் உள்ளத்தை நிறைத்துக் கொள்ளலாம்.

10. தள்ளிப்போடாதே; எதற்கும் வருந்தாதே!

“இது என்னால் முடியுமா? முடியாதா?” என்று பெரிதாக எண்ணி காலம் கடத்தி நேரத்தை வீணாக்காதீர்கள். இத்தகைய பயனற்ற மனப்போராட்டங்களால் நாட்கள், வாரங்கள், மாதங்கள் சிலவேளை வருடங்கள் கூட வீணாகலாம்.

உங்களால் போதுமான முழு அளவுக்குத் திட்டமிட்டுக் கொள்ள முடியாது. ஏனெனில், எதிர்காலத்தில் நடப்பதை உங்களால் ஒருபோதும் முன்பே பூரணமாக உணர்ந்து கொள்ள முடியாது.

உங்கள் நேரத்தின் மதிப்பை உணர்ந்து, முடிக்க வேண்டியவைகளை யோசித்துக் கொண்டிராமல் உடனடியாக செய்யத் துவங்குங்கள்.

முதல் முறை நீங்கள் தோல்வியடைவது விஷயமேயில்லை. நீங்கள் செய்த தவறுகளிலிருந்து பாடம் பயின்று அடுத்த முறை நீங்கள் பரிபூரணமான வெற்றியடையலாம்.

சாய்ந்து உட்கார்ந்து கவலை கொண்டிருப்பது எதற்கும் பயன் தராது – மன அமைதியைக் கெடுப்பதைத் தவிர.

உங்களின் தவறுகளிலிருந்து பாடம் பயிலுங்கள்; ஆனால் ஒருபோதும் கடந்து போனதை நினைத்து வருந்தி ஏங்காதீர்கள்.

எதற்கும் வருத்தமடையாதீர்கள்.

எது நடந்ததோ அது நடப்பதற்குரிய விதியின் வழியில் நடந்து முடிந்தது. கிடைக்காத பாலுக்கு ஏன் அழ வேண்டும்?

உறுதி கொள்..

வருவது எதுவானாலும்..

துணிந்து எதிர் கொள்..