வசிஷ்டரின்_வாயால்_பிரம்மரிஷி பட்டம் பெற்றவர் #விசுவாமித்திரர்.

Spread the love

#வசிஷ்டரின்_வாயால்_பிரம்மரிஷி பட்டம் பெற்றவர் #விசுவாமித்திரர்.

 

ஆனால், அந்தப் பட்டம் அவருக்கு உடனே கிடைத்துவிடவில்லை. கடுமையான தவம் இயற்றிய பிறகே அவருக்கு பிரம்மரிஷி பட்டம் கிடைத்தது.

 

விசுவாமித்திரர் பிரம்மரிஷி பட்டம் பெற்ற வரலாறு:

 

ஒரு நாட்டின் மன்னனாக இருந்த கௌசிகன் என்பவன், வேட்டையாடுவதற்காக படைபரிவாரங்களுடன் காட்டுக்குச் சென்றான். வேட்டையாடி விட்டு திரும்பும் வழியில், வசிஷ்டரின் ஆசிரமம் பக்கமாக வருகிறார். தன் ஆசிரமம் பக்கமாக வந்த கௌசிக மன்னனையும் படைபரிவாரங்களையும் உணவு தந்து உபசரிக்க விரும்பிய வசிஷ்டர், கௌசிகனிடம், ‘‘உங்களுக்கும் உங்களுடைய படையினருக்கும் நான் உணவு பரிமாறுகிறேன், நீங்கள் உணவு உண்டுவிட்டுத்தான் செல்ல வேண்டும்’’ என்று சொன்னாராம்.

 

அதற்கு கெளசிகர், ‘’எனக்கும் என் படை யினருக்கும் உங்களால் உணவு பரிமாற முடியாது, காட்டுப் பகுதியில் ஆசிரமத்தில் தனிமையில் இருக்கும் நீ எப்படி இத்தனை பேருக்கும் உணவு சமைத்து பரிமாற முடியும்?’’ என்று கேட்டார்.

 

வசிஷ்டர், ‘‘முடியும் மன்னா, நீங்களும் உங்கள் பரிவாரங்களும் சற்றே இளைப்பாற அமருங்கள். சற்றுநேரத்துக்குள் உங்களுக்கு அறுசுவை விருந்து தயாராகிவிடும்’’ என்றார்.

 

பிறகு வசிஷ்டர், ஆசிரமத்துக்குப் பின்புறம் இருந்த கோமாதாவிடம் சென்று, ‘‘வந்திருக்கும் அனைவருக்கும் அறுசுவை விருந்து தயார் செய்து, பணிப்பெண்கள் மூலம் பரிமாற வேண்டும்’’ என்றார். அப்படியே சற்றுநேரத்தில் அறுசுவை விருந்து தயாரா னது. பரிமாறுவதற்கு பணிப்பெண்களும் வந்தனர்.

 

வசிஷ்டரின் ஆசிரமத்தில் இப்படி ஒரு தெய்விகப் பசு இருப்பதைக் கண்ட கௌசிகன், ‘‘கேட்டதைத் தரும் அட்சய பத்திரமான கோமாதா, சாதாரண முனிவரான உன்னிடம் இருக்கக்கூடாது. நாட்டின் மன்னனான என்னிடம்தான் இருக்க வேண்டும்’’ என்று சொல்லி, அந்த தெய்விகப் பசுவைத் தனக்குத் தருமாறுக் கேட்டார். வசிஷ்டர் மறுத்தார்.

 

வசிஷ்டரின் மகிமை தெரியாத கௌசிகன், தன்னுடைய படையினரைப் பார்த்து, அந்தப் பசுவை இழுத்து வருமாறு கூறினான். படையினர் கோமாதாவை இழுத்து வரச் சென்றனர். அவர்கள் அனைவரையும் எரித்து சாம்பலாக்கும்படி சாபம் கொடுக்கிறார் வசிஷ்டர். அப்படியே படைவீரர்கள் அனைவரும் எரிந்து சாம்பலாகி விடுகின்றனர்.

 

அப்போதுதான் வசிஷ்டரின் தவ வலிமையை உணர்ந்துகொண்ட கௌசிகன், ‘‘தங்களுக்கு எப்படி இந்த வலிமை கிடைத்தது? தங்களைப் போலவே நானும் பிரம்மரிஷி ஆகவேண்டும். அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?’’ என்று கேட்டான்.

 

‘‘கடுமையாகத் தவம் இயற்றினால் மட்டுமே பிரம்மரிஷி பட்டம் கிடைக்கும். சுகபோகங்களில் திளைத்த உன்னால் அப்படி கடும் தவம் புரியமுடியாது’’ என்று வசிஷ்டர் சொல்ல,

 

‘‘படைபரிவாரங்கள் இல்லாமல் நான் நாட்டுக்குப் போவதும் ஒன்றுதான். போகாமல் இருப்பதும் ஒன்றுதான். எனவே நானும் தங்களைப் போல் கடும் தவம் புரிந்து, உங்கள் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெறுகிறேன்’’ என்று சபதம் செய்வதுபோல் கூறிவிட்டு தவம் இயற்றச் சென்றுவிட்டார்.

 

தவத்தின் பயனாக அளவற்ற ஆற்றலும் பெற்றார். விசுவாமித்திரர் என்ற பெயரும் ஏற்பட்டது. ஆனால், தவப் பயனாகத் தான் பெற்ற ஆற்றலை, திரிசங்கு சொர்க்கம் அமைத்துக் கொடுத்ததால் இழந்துவிட்டார். இழந்த சக்தியைப் பெறுவதற்காக மீண்டும் தவம் இயற்றும் பொருட்டு வட திசையில் இருந்து தென் திசைக்கு வந்து சேர்ந்த இடம்தான் விஜயாபதி. விஜயாபதி கடற்கரைக்கு அருகில் லிங்கத்திருமேனியாக இறைவனையும், இறைவியையும் எழுப்பி பூஜை செய்து, ஓமகுண்டம் வளர்க்க ஆரம்பித்தார். அப்போது யாகம் செய்ய விடாமல் தாடகை என்ற அரக்கி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தாள். தாடகையின் தொல்லையைப் பொறுக்கமுடியாமல், விசுவாமித்திரர், ராம லட்சுமணர்களை அழைத்து வருகிறார். ராமபிரான் தாடகையை அழிக்க அஸ்திரம் தொடுத்தார். ராமரின் அஸ்திரத்துக்கு பலியான தாடகை, அருகில் உள்ள மலையில் விழுந்து மடிகிறாள். தாடகை விழுந்து மடிந்த மலை, தாடகை மலை என்றே அழைக்கப்படுகிறது. (கன்னியாகுமரி மாவட்டம், தோவாளைக்கு அருகில் இருக்கும் தாழக்குடி என்ற இடத்துக்கு அருகில் உள்ள இந்த மலை, ஒரு பெண் படுத்திருப்பதைப் போலவே காட்சி தருகிறது).

 

யாகத்தின் முடிவில், இறைவனும், இறைவியும் விசுவாமித்திர மகரிஷிக்கு தம்பதி சமேதராகக் காட்சி கொடுத்து ’’இழந்த சக்திகளைப் பெற்று விட்டாய்., காசிக்குச் சென்று உன்னை சபித்த வசிஷ்டர் வாயாலேயே ரிஷிகளில் உயர்ந்த பட்டமான ‘பிரம்மரிஷி’ பட்டத்தைப் பெறுவாய். வசிஷ்டரே உனக்கு குருவானவர். மேலும் நீ தவம் புரிந்த இந்த இடத்துக்கு வந்து செல்பவர்களுக்கு தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை’’ எனச் சொல்லி அருளினர். விசுவாமித்திரரும் காசிக்குச் சென்று, வசிஷ்டர் வாயாலேயே பிரம்ம ரிஷி என அழைக்கப்பட்டார்.

 

’விஜயம்’ என்றால் வெற்றி, ’பதி’ என்றால் இடம். விஜயாபதி என்றால் ‘வெற்றிக்கான இடம்’ என்பதாகும். விசுவாமித்திரர் யாகம் செய்த இடமாதலாலும், இழந்த சக்திகளை மீண்டும் பெற்று விட்ட இடமாதலாலும் இங்கு இவருக்குத் தனிக்கோயில் உள்ளது. இந்தியாவிலேயே விசுவாமித்திர மகரிஷிக்கு தனிக்கோயில் இருப்பது விஜயாபதியில்தான். திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது விஜயாபதி.

 

கடற்கரையை நோக்கி கையில் கமண்டலத் துடனும், கழுத்தில் ருத்திராட்ச மாலையுடனும் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார் விசுவாமித்திர மகரிஷி. அருகிலேயே உள்ளது விசுவாமித்திர மகாலிங்க சுவாமி கோயில். இறைவனை விசுவாமித்திரர் வழிபட்ட காரணத்தால், இத்தல இறைவனுக்கு விசுவாமித்திர மகாலிங்க சுவாமி என்றும், இறைவிக்கு அகிலாண்டேஸ்வரி என்றும் திருநாமம் வழங்கப்படுகிறது. இறைவனும், இறைவியும் தனித்தனி மண்டபத்தில் தனித்தனிச் சந்நிதிகளில் காட்சியளிக்கின்றனர். கோயிலின் தல விருட்சம் வில்வமரம்.

 

விசுவாமித்திரர் யாகம் செய்வதற்கு முன்னால், இங்குள்ள விநாயகரை வழிபட்டுவிட்டுத்தான் யாகம் செய்துள்ளார். அதனால், இந்த விநாயகருக்கு ஓமகுண்ட கணபதி என்று பெயர்.கணபதி சந்நிதிக்குள் வலப்புறம் ராமர், இடப்புறம் லட்சுமணர் உருவம் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. விசுவாமித்திரர் யாகம் செய்த ஓமகுண்டம் தற்போது கிணறு போல காட்சியளிக்கிறது. விசுவாமித்திரர் சித்திரை மாதம் அனுஷம் நட்சத்திரத்தன்று யாகமும், மாசி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று தியானத்தையும் தொடங்கினாராம்.

 

விசுவாமித்திரரின் ஜன்ம நட்சத்திரம் விசாகம். ஒவ்வொரு மாதமும் அனுஷம், உத்திரட்டாதி, விசாகம் ஆகிய நட்சத்திரங் களிலும், பெளர்ணமி தினத்தன்றும் விசுவாமித்திரருக்கு சிறப்பு அபிஷேகமும் புஷ்ப அர்ச்சனையும் நடைபெறு கின்றன. இதில் கலந்து கொண்டால், பித்ருக்கள் சாபம் நீங்குவதாகச் சொல்லப் படுகிறது. கடலில் நீராடி, ஈர ஆடையுடனே ஓமகுண்ட கணபதிக்கு சிதறு தேங்காய் உடைத்து, விசுவாமித்திரருக்கு சிவப்பு வெள்ளை வஸ்திரம் அணிவித்து, அவருக்கு உகந்த ரோஜாப்பூ மாலை சாத்தி, 11 நெய் தீபமேற்றி, விசுவாமித்திரர் சந்நிதியை மூன்று முறைச் சுற்றி வந்து, மறுபடியும் ஒரு முறை விசுவாமித்திரரை தரிசனம் செய்துவிட்டுச் சென்றால் சில நாட்களிலேயே முன்னேற்றம் தெரிவதாகக் கூறுகின்றனர் பலன் பெற்றவர்கள்.

 

விசுவாமித்திர மகாலிங்க சுவாமிக்கு வெள்ளை வஸ்திரம், வெள்ளை அரளி மாலை அணிவித்து, அகிலாண்டேஸ்வரி அம்பிகைக்கு சிவப்பு நிறப் பட்டு, செவ்வரளி மாலை சாத்தி நெய் தீபமிட்டு வழிபட்டால் நினைத்த காரியம் ஸித்தியாகுமாம். தைமாதம் தைப்பூசத்தில் இறைவனையும், இறைவியையும் விசுவாமித்திரர் பிரதிஷ்டை செய்ததால், தைப் பூசத்தன்று சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

 

அடைந்த தோல்வியை மாற்றி வெற்றியை அருளும் விஜயாபதி விசுவாமித்திரர் கோயிலுக்குச் சென்று, ஐயனையும் அம்பிகையையும் வழிபடுவதுடன், விசுவாமித்திரரையும் தரிசித்து வாழ்க்கையில் தோல்விகளைத் தவிர்த்து, எங்கும் எதிலும் வெற்றிகளே கிடைக்க பிரார்த்திப்போம்.

இவன்

அடியேன்

திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம்

 

(படித்ததில் பிடித்ததை இங்கு பதிவு செய்யபட்டுள்ளது.)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *