முந்தி விநாயகனே…

முந்தி முந்தி விநாயகனே
முக்கண்ணனார்தன் மகனே
வந்தனம் செய்தோமய்யா
வந்து நல்லருள் தாருமய்யா   

(பழம்பாடல்)

சுபகாரியங்கள், விழாக்கள் எதுவாக இருந்தாலும், முழுமுதற் தெய்வமாம் விநாயகப் பெருமான் முந்தி வந்து அருள் செய்ய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன், அவரைத் துதித்து வழிபடுவது நம் முன்னோர் மரபு. அவ்வகையில் தைப்பொங்கல் திருநாளிலும் ஆனைமுகனுக்கே முதல் வழிபாடு.

உத்தராயண புண்ணிய காலத்தின் துவக்கமான தை முதல் நாளை… நம்மை வாழவைக்கும் இயற்கைக்கும், ஆதவனுக்கும் நன்றி சொல்லி வழிபடும் நாளாக்கிவைத்திருக்கி றார்கள் முன்னோர்கள். அவ்வகையில் பொங்கலும், கரும்பும், காய்கனிகளும் படைத்து வழிபடத் துவங்குமுன்… மஞ்சள் பிள்ளையார், சாணப் பிள்ளையார் பிடித்து வைத்து, அவரை முதலில் வணங்கியபிறகே மற்ற வழிபாடுகளைத்  தொடர வேண்டும்.
இந்த முதல் வணக்கம் மட்டுமல்ல, தைத் திங்களில் பிள்ளையாரைப் போற்றும் இன்னும் பல வழிபாடுகள் உண்டு. அவை என்னென்ன என்று தெரிந்துகொள்வோமா?

மார்கழியில் துவங்கி…

மார்கழி மாதம் முழுவதும் ஆண், பெண் அனைவரும் சூரியன் உதிப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்னதாக எழுந்து, தினசரி கர்ம அனுஷ்டானங்களை முடித்துக்கொள்வார்கள். வீட்டைச் சுத்தம் செய்து, முற்றத்தின் நடுப் பகுதியை சாணத்தால் மெழுகி, மாக்கோலம் போட்டு, சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து, பூக்களைத் தூவி, ‘விக்கினங்களை நீக்கும் விக்னேஸ்வரா! எங்கள் வீடுகளில் அசுர மற்றும் பூத – பிசாசுகளின் தொல்லையால் எந்தவிதமான துயரமும் நேராதபடி காப்பாற்றுவாய்!’ என்று அவரிடம் வேண்டுவர். இப்படி வேண்டிக் கொள்வதால் பிள்ளையார் நம் வீட்டுக்குக் காவலாக இருப்பார்; துர்சக்திகள் நம் வீட்டை அணுகாது. அவை, நாம் வாசலில் போட்டுவைத்திருக்கும் மாக்கோலத்தின் பச்சரிசி மாவைச் சாப்பிட்டுவிட்டு அகன்றுவிடும் என்பது நம்பிக்கை.

இப்படி, மார்கழி மாதம் முழுவதும் வாசலில் வைக்கப்படும் விநாயக (சாணப் பிள்ளையார்) வடிவங்களைச் சேகரித்துவைத்து, தைப் பொங்கலுக்குப்பிறகு ஒரு நல்ல நாளில், மொத்த விநாயக வடிவங்களையும் ஓரிடத்தில் வைத்துப் பூஜை செய்து கொழுக்கட்டை முதலானவற்றை நைவேத்தியம் செய்வார்கள். பின்னர், பிரத்யேகமாக செய்யப்பட்ட சிறிய தேர் ஒன்றில் அவற்றை வைத்து அலங்கரித்து, வாத்திய கோஷத்துடன் எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பார்கள். இந்த வழிபட்டால், வீட்டில் வறுமை நீங்கும்; வியாதி போகும்; செல்வம் சேரும்; விரும்பும் பேறுகள் கிடைக்கும் என்பது முன்னோர் அனுபவத்தில் கண்டறிந்த உண்மை.

பிள்ளையார் விரதங்கள்…

பொதுவாக ஆடி மற்றும் தை மாதங்களில் செய்யப்படும் வழிபாடுகளுக்கு தனிச்சிறப்பு உண்டு.  இரண்டு மாதங்களுமே அயன காலங்களின் துவக்கம். ஆகவே, இந்த மாதங்களில் வரும் கிருத்திகை, அமாவாசை, பூசம், பூரம் முதலான திருநாட்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த வரிசையில் பிள்ளையாருக்கான விரத நாட்களும் சேரும்.

வெள்ளி பிள்ளையார் விரதம்: இந்த விரதத்தை ஆடி மற்றும் தை மாத வெள்ளிக்கிழமை களில் பெண்கள் அனுஷ்டிப்பர். அன்று அதிகாலை மூன்று மணிக்கே எழுந்து எண்ணெய் தேய்த்து நீராடி, சுத்தமான உடை உடுத்திக்கொண்டு விரதத்தைத் தொடங்க வேண்டும். கன்றின் சாணத்தால் பிள்ளையார் பிடித்துவைத்து தாழை மடல், நெற்கதிர் ஆகியவற்றைப் பரப்பி கொழுக்கட்டை நைவேத்தியம் செய்து பூஜையை முடிப்பர். அதன் பயனாக துன்பம் நீங்கி, நிறைந்த செல்வம் பெற்று சிறப்பான வாழ்க்கையைப் பெறலாம்.

செவ்வாய் பிள்ளையார் விரதம்: இந்த விரதத்தையும் பெண்களே அனுஷ்டிப்பார்கள். ஆடி அல்லது தை மாதம் வரும் ஏதேனும் செவ்வாய்க்கிழமையில் துவங்கி, இத்தனை செவ்வாய்க்கிழமைகள்  என்று கணக்கு வைத்துக்கொண்டு வழிபடுவார்கள்.

இரவில் அக்கம்பக்கத்துப் பெண்கள் யாவரும் ஒன்றுகூடி, நெற்குத்தி அரிசியாக்கி, இடித்து மாவாக்கி, உப்பு சேர்க்காமல், தேங்காய்த் துண்டங்கள் சேர்த்து கொழுக்கட்டை அவித்துப் படையல் செய்வார்கள். பூஜை முடிந்ததும் அவர்களே கொழுக்கட்டைகளை பகிர்ந்து உண்பார்கள். அத்துடன் விடிவதற்குள்ளாக, வழி பாட்டில் வைக்கப்படும் சாணப் பிள்ளையாரை அருகிலுள்ள நீர்நிலையில் கொண்டு சேர்ப்பார்கள். இதனால், சர்வ மங்கலங்களும் உண்டாகும்.

இந்திர விநாயகர்…

பொங்கலன்று வரக் கூடிய சூரிய பூஜையையும், அதன் மங்கலங்களையும் வரவேற்கும் முகமாக, முதல் நாளன்று போகி பண்டிகையைக் கொண்டாடுகிறோம். அன்று பழையன கழிதலும் புதியன புகுதலும் நிகழும்.
வடமாநிலங்களில் இந்த நாளில் இந்திரனுக்கு உரிய விழாவாகக் கொண்டாடுகிறார்கள். `போகி’ என்ற சொல், இந்திரனையும் குறிக்கும். மேலும், பயிர் விளைய மழை தேவை. மழைக்கு ஆதாரம் மேகங்கள். இந்திரனே மேகாதிபதி. ஆக, இந்திரனை வழிபடுவதால், மழைவளம் செழிக்கும் என்பது நம்பிக்கை. அவ்வண்ணம் இந்திரனை ஆராதிப்ப துடன், அவர் வழிபட்ட தெய்வங்களையும் பூசிப்பதால், பலன்கள் இரட்டிப்பாகக் கிடைக்கும்.

இந்திர தேவன், பிள்ளையாரை வழிபட்ட ஊர் அச்சிறுபாக்கம். சிவபெருமான் ஆட்சீஸ்வரராகக் கோயில் கொண்டிருக்கும் தலம் இது. தேவர்கள் பலரும் வழிபட்ட இந்தத் தலத்துக்கு இந்திரன் வந்து தீர்த்தம் அமைத்து, அதன் கரையில் விநாயகரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகப் புராணங்கள் கூறும். இந்த விநாயகருக்கு அச்சுமுறி விநாயகர் என்றும் திருப்பெயர் உண்டு (இந்தப் பெயர் முப்புரம் எரித்த கதையுடன் தொடர்புடையது என்பர்). இவரை வழிபடுவதால், வாழ்வில் இன்னல்கள் நீங்கி இந்திரபோகத்துக்குச் சமமான வாழ்வும் வரமும் கிடைக்கும்.

‘எங்கள் ஊரின் அருகிலோ சுற்றுப்புறத்திலோ இந்திரன் வழிபட்ட தலங்கள் எதுவும் இல்லையே’ என்பவர்கள், ஊரின் கிழக்கு திசையில் அருள் பாலிக்கும் விநாயகரை வழிபடலாம். கிழக்கு, இந்திரனுக்கு உரிய திசை. அங்கு கோயில் கொண்டிருக்கும் விநாயகரை வழிபட்டு,  அருளும் பொருளும் பெறலாம்.

தைப் பொங்கல் தரிசனம்

 

தைப் பொங்கல் தரிசனம்

”திருச்சிற்றம்பலத்தில் இந்நேரம் அர்த்தஜாம பூஜை துவங்கியிருக்கும்தானே?” – பொய்கைநல்லூரின் அடர்ந்த வனப்பகுதியில், வெள்ளால மரத்துக்கு அருகில் அமர்ந்தபடி ஸ்ரீவான்கோபர் கேட்டார். அருகில் அமர்ந்திருந்த ஸ்ரீமகாகோபர், ”ஆமாம்… அனைத்து ஆலயங்களில் உள்ள சிவனாரும் இப்போது தில்லையம்பதிக்கு வந்திருப்பார்கள். சற்று நேரத்தில் திரை விலக்கி, தீபாராதனை காட்டுவார்கள்; ஆடல்வல்லானின் அற்புத தரிசனத்தில் பக்தர்கள் திளைப்பார்கள்” என்றார்.
இருள் சூழ்ந்த வேளையில், இரண்டு முனிவர்களும் வனத்தில் ஏன் அமர்ந்திருக்கின்றனர்?

‘இறைவனை அடைவதற்கு சிறந்த வழி இல்லறமா… துறவறமா?’ என்று இரண்டு பேருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட… இந்திரனிடம் சென்று விளக்கம் தரும்படி கேட்டனர். ‘முனிவர்களின் சாபத்துக்கு ஆளாகக் கூடாது’ என்று பதறிய இந்திரன், ”தில்லையம்பலத்தானிடம் கேளுங்கள்; தக்க பதில் கிடைக்கும்” என்றான். அதன்படி இரண்டு முனிவர்களும் சிதம்பரத்துக்குச் சென்று, சிவனாரைப் பணிந்தனர்; விவரம் சொல்லி விளக்கம் கேட்டனர். ”நீங்கள் தவம் செய்யும் இடத்தில் வெள்ளால மரம் உள்ளது. அதற்கு அருகில், உறங்கு புளி, உறங்கா புளி என இரண்டு மரங்கள் இருக்கின்றன. அங்கே காத்திருங்கள். அர்த்தஜாம பூஜை முடிந்ததும் வருகிறேன்” என்று சொல்லி அனுப்பிவைத்தார் ஆடல்வல்லான். இப்போது, சிவனாருக்காகத்தான் காத்திருக்கின்றனர்.

சிதம்பரத்தில் அர்த்தஜாம பூஜை முடிந்தது; மெள்ள மெள்ள பக்தர்கள் வெளியேறினர்; கோயில் நடை சாத்தப்பட்டது; அடுத்த நிமிடம்… முனிவர்களுக்கு எதிரே காட்சி தந்தார் நடராஜ பெருமான். பதற்றமும் சிலிர்ப்பும் பொங்க இறைவனை நமஸ்கரித்தனர் முனிவர்கள். ”இல்லறமாக இருந்தாலென்ன… துறவறம் பூண்டால் என்ன? நெறிமுறை பிறழாமல், உண்மையும் ஒருமித்த மனமும் கொண்டு வாழ்ந்தால் என்னை அடைவது எளிது! இதில் உயர்வு தாழ்வுக்கு இடமே இல்லை. இரண்டும் இணையானதே!” என்று அருளினார் சிவனார். இப்படி இரண்டு பேருக்கும் பொதுவாக பதில் உரைத்ததால், பொதுஆவுடையார் என்றும், இரண்டு பேருக்கும் மத்தியஸ்தம் செய்து தீர்ப்பு சொல்லியதால், ஸ்ரீமத்தியபுரீஸ்வரர் என்றும் திருநாமம் அமைந்ததாம் சிவபெருமானுக்கு!

”தாங்கள் இங்கிருந்தபடி அருள வேண்டும்” என்று முனிவர்கள் வேண்ட, ”அப்படியே ஆகட்டும்” என்ற ஆடல்வல்லான், அந்த வெள்ளால மரத்திலேயே ஐக்கியமானார். பொய்கைநல்லூர், பின்னாளில் பரக்கலக்கோட்டை ஆனது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ளது பரக்கலக்கோட்டை. இங்கே… அழகிய ஆலயத்தில் வெள்ளால மரமாகவே காட்சி தந்து அருள்கிறார் ஸ்ரீபொதுஆவுடையார்! ஆம்… மற்ற தலங்களில் லிங்க வடிவில் சந்நிதி கொண்டிருக்கும் சிவனார், இங்கே மரமாகவே காட்சி தந்து அருள்கிறார். முனிவர் பெருமக்களுக்கு கார்த்திகை மாத சோம வாரத்தில் (திங்கட் கிழமை) திருக்காட்சி தந்து உபதேசித்ததால், ஒவ்வொரு திங்கட்கிழமையும் இங்கே சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இன்னொரு விஷயம்… சிதம்பரத்தில் அர்த்தஜாம பூஜை முடிந்ததும் நடராஜர் இங்கே வந்ததால், ஒவ்வொரு திங்கட்கிழமையும் இரவு 10.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நள்ளிரவு 12 மணிக்கு பூஜைகள் நடைபெறும். கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் விமரிசையாக பூஜைகள் நடந்தேறும்.

ஆம்… கோயிலில், அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, ஒரு கால பூஜை, நான்கு கால பூஜைகள் என நடத்துவதுதானே வழக்கம். இங்கே… திங்கட்கிழமை மட்டும் இரவு திறந்து, நள்ளிரவில் நடை சார்த்தப்படும். பகலில் நடை திறக்கப்படுவதில்லை. எனவே, திங்கட்கிழமை அன்று பக்தர்கள், இங்கே வெள்ளமென குவிகின்றனர். அம்பாளுக்கு இங்கே சந்நிதி இல்லை.

திங்கள்தோறும் இரவில் திறக்கப்படும் இந்த ஆலயம், வருடத்தில் ஒரேயரு நாள் மட்டும் பகலில் திறக்கப்படுகிறது; ஸ்வாமிக்கு அலங்காரமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது; லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுகின்றனர். அந்த நாள்… தைத் திங்களாம் பொங்கல் திருநாள்!

சுற்றுவட்டார மக்களுக்கு இஷ்ட தெய்வம், குல தெய்வம், காவல் தெய்வம் எல்லாமே பொதுஆவுடையார்தான்! இவரை பிரார்த்தித்து நிலத்தில் விதைத்தால், அமோக விளைச்சல் உறுதி. இவரை வேண்டிக் கொண்டு, நகைக்கடை, பேக்கரி, துணிக்கடை என எந்த வியாபாரம் துவங்கினாலும் லாபம் நிச்சயம். இதில் மகிழ்ந்து, நெல் தருகின்றனர்; கம்பும் கேழ்வரகும் வழங்குகின்றனர்; தேங்காயையும் மாங்காயையும் தருகின்றனர்; ஆடு, கோழி, மாடு என தருகின்றனர்; பேனா, நோட்டுப் புத்தகம் வழங்குபவர்களும் உண்டு. இவற்றையெல்லாம் பொங்கலின் போது ஏலத்துக்கு விடுவார்கள். இதை ஏலம் எடுத்துச் சென்றால், செல்வச் செழிப்புடன் திகழலாம்; நோய் நொடியின்றி வாழலாம்; கல்வி-கேள்வியில் சிறக்கலாம் என்று சிலிர்ப்புடன் சொல்கின்றனர் பக்தர்கள்.

பொங்கல் நாளில்… பொதுஆவுடையாரை வணங்கி வழிபடுங்கள்; சந்தோஷமும் அமைதியும் பொங்கலைப் போலவே பொங்கிப் பெருகட்டும்!

குரு பரிகாரத் தலம்!

ஸ்ரீவான்கோபர், ஸ்ரீமகாகோபர் ஆகிய இரண்டு முனிவர்களுக்கும், ஆலமரத்தின் ஒரு வகையான வெள்ளால மரத்தடியில் அமர்ந்தபடி, நடராஜ பெருமான் உபதேசித்து அருளியதால், குரு தட்சிணாமூர்த்தியின் சொரூபமாகவே கருதுகின்றனர் பக்தர்கள். ஆகவே, இந்தத் தலத்துக்கு வந்து இறைவனை வழிபட, குருவருள் நிச்சயம் என்கின்றனர்.

கதவே நடராஷர்!

ஆலயத்தில் கருவறைக் கதவு பித்தளைத் தகட்டால் வேயப்பட்டுள்ளது. கதவைத் திறந்தால் வெள்ளால மரத்தை தரிசிக்கலாம். தவிர, மரத்தில் சிவலிங்க வடிவம் போலவே அலங்கரித்து பூஜைகள் செய்வார்கள் அர்ச்சகர்கள். அப்போது, ஸ்ரீமகாகோபர் மற்றும் ஸ்ரீவான்கோபர் இருவருக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்படும். வாராவாரம் திங்கட்கிழமை மட்டுமே ஆலயத்தின் நடை திறக்கப்படுவதால், பிற நாட்களில் கருவறைக் கதவையே கடவுளாக எண்ணி வழிபடுகின்றனர்.

விளக்குமாறு நேர்த்திக்கடன்!

உளுந்து, பயறு, கோதுமை, சாக்லேட், நெல், அரிசி… என எதை வேண்டு மானாலும் நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர் பக்தர்கள். விளக்குமாறில் உள்ள குச்சிகள் நீண்டிருப்பது போல், தங்களுக்கு நீண்ட கூந்தல் வேண்டும் என பிரார்த்தித்து, விளக்குமாறு செலுத்தும் பெண்களும் உண்டு!

ஆல இலை விசேஜம்!

ஆல மரத்தினுள், ஸ்ரீநடராஜபெருமான் ஐக்கியமானதாகச் சொல்கிறது தல வரலாறு. கருவறையில் காலூன்றி, பரந்து விரிந்து கிளை பரப்பி நிற்கும் ஆல மரம், தல விருட்சமும்கூட! இந்த மரத்தின் ஒரேயரு இலையை பறித்துச் சென்று, வீட்டு பூஜையறை, பீரோ, பணப் பெட்டி, தானியக் குதிர் ஆகியவற்றில் வைத்து வழிபட… வளமான வாழ்வு பெறலாம்; நிறைவான நிம்மதி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை!