தன்னம்பிக்கையை அதிகரிக்க :-

தன்னம்பிக்கையை அதிகரிக்க :-
1. எப்போதும் பின் வரிசையில் ஒளியாதீர்கள். முன்
வரிசைக்கு வாருங்கள்.
2. யாரைச் சந்தித்தாலும், தைரியமாக அவர்கள் கண்களைப்
பார்த்துப் பேசுங்கள்.
அவர் எப்பேர்ப்பட்ட பிரபலமாக இருந்தாலும்,
தலை கவிழ்ந்து தரையில் விரலால் கோலம்
போடுவதெல்லாம் வேண்டாம்.
3. நீங்கள் நடக்கிற வேகத்தை அதிகப்படுத்துங்கள்.
நடையில் தெரியும் அந்த சுறுசுறுப்பு, உற்சாகம் உங்கள்
செயல் வேகத்தையும் தானாக அதிகரிக்கும்.
4. எந்த கூட்டத்திலும் அடுத்தவர்கள் பேசட்டும்
என்று காத்திருக்காதீர்கள். அங்கே கேட்கிற முதல் குரல்
உங்களுடையதாகட்டும்.
5. எந்நேரமும் உதடுகளில் ஒரு புன்னகையை வைத்திருங்கள்.
அது தருகிற தன்னம்பிக்கை வேறு எங்கேயும் கிடைக்காது.

ஜோதிடம் இன்னும் எளிமையாக வேண்டும்.

ஜோதிடம் இன்னும் எளிமையாக வேண்டும்.
—————————————————————–
ஜோதிடத்துறைக்குள் நுழைவதற்கு முன் வெளியே நின்று பார்த்தபோது எனக்குள் ஒரு பிரமிப்பு இருந்தது. ஜோதிடர்களிடம் ஏதோ மிகப்பெரிய திறமை இருப்பதாக கருதியதுண்டு. ஏதோ அவர்களில் சிலரிடம் ஒரு வித அமானுஷ்ய சக்தி இருப்பதாகக்கூட நினைத்ததுண்டு. நான் ஜோதிடத்திற்குள் நுழைந்து பலரை பக்கத்திலிருந்து கவனித்தபோது எனக்குள் இருந்த பிரமிப்பு படிப்படியாக குறைந்து விட்டது. இந்த துறைக்குள் இருக்கும் போட்டி, பொறாமை, பொச்சரிப்பு, சூது , வஞ்சகம், துரோகம் இவைகளை நேரில் கண்டபோது எனக்குள் ஒரு பெரிய ஆத்திரம் பொங்கி எழுந்தது. என்னுடைய வருத்தங்களை நெருக்கமாக இருந்த சிலரிடம் பகிர்ந்துகொண்டதுண்டு. அவர்களிடம் என் எண்ணங்களை பகிர்ந்து கொண்ட பின் அவர்களும் என்னை விட்டு விலகி சென்றார்கள். அவர்கள் எனக்கு எதிராக செயல் பட்டார்கள். நான் பெரும்பாலும் தனியாகவே செயல்பட்டேன். எத்தனை கேலி ,கிண்டல், அவமானம். அத்தனை சூழ்நிலைகளிலும் நான் தனித்தே நின்றேன். ஜோதிடத்துறையில் இருந்துகொண்டு அதற்கு களங்கம் கற்பித்துக்கொண்டிருந்தவர்களை இந்த துறையில் இருந்து ஒழித்துக்கட்டுவேன் என்று வெளிப்படையாக மிகவும் நெருக்கமானவர்களிடம் சுமார் 12 வருடங்களுக்கு முன்பு சொல்லியதுண்டு. நான் யார் யாரையெல்லாம் ஜோதிட துறையிலிருந்து தூக்கி எரிய வேண்டும் என்று நினைத்தேனோ? அவர்கள் எல்லோருமே காணாமல் போய்விட்டார்கள். இவர்களுக்கு எதிராக நான் நேரடியாக எந்த தீங்கும் செய்யவில்லை. என்னால் முடிந்தவரை பல ஜோதிட நூல்களை எழுதி ஜோதிடத்தை எளிமை படுத்தினேன். அவ்வளவுதான்.
எனக்கு எதிராக ஜோதிட மேடைகளில் பலர் என் முன்னாலேயே கர்ஜித்ததுண்டு. அவர்கள் இப்பொழுது எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஜோதிடத்தை என்னால் முடிந்தவரை எளிமை படுத்துவேன். புதியவர்களை உருவாக்குவேன். ஜோதிடத்துறைக்குள் இருக்கும் தனி மனித ஆதிக்கங்களை நிச்சயம் இல்லாமல் செய்வேன். இதற்கு ருத்திரன் எனக்கு துணையிருப்பான்.

சித்திர குப்தரும் எமதர்மரும்

சித்திர குப்தரும் எமதர்மரும்
★★★★★★★★★★★★★★★
SG யின் ஜோதிட பார்வை
★★★★★★★★★★★★★

சித்திர குப்தர்
★★★★★★★★
சித்திரை மாதம் பௌர்ணமி திதி சித்திரை நட்சத்திரத்தில் அவதரித்தவர் சித்திர குப்தர்.
சித்திரகுப்தரின் இராசி துலாம்.

காலப்புருஷ ராசியின் ஏழாம் இராசி துலாம்.இந்த ராசியில் கர்மக்காரகன் சனிக்கு உச்ச ராசியாக அமைந்துள்ளது.
துலாம் ராசியின் உருவ அமைப்பு தராசு. ஒரு மனிதனின் கர்மா துல்லியமாக எடைப் போடப்படும் ராசியாக இருப்பதால் தான் இதில் கர்மகாரகன் சனி உச்சம் அடைகிறார்.

சித்திர குப்தரின் பணி ஒரு மனிதனின் கர்மவினை கணக்கை துல்லியமாக எழுதி வைப்பது, அதனால் தான் சித்திர குப்தர் துலாம் ராசியில் அவதரித்துள்ளார்.துலாம் இராசி என்பது தராசு. தராசில் ஒரு தட்டில் பாவமும் மறு தட்டில் புண்ணியமும் எடை போடப்படுகிறது.

நீதிமானாகிய சனியை ஆயுள்காரகன் என்றும் கர்மகாரகன் என்றும் கூறுகிறோம்.துலாமில் நீச்சம் அடையும் கிரகம் சூரியன்.சூரியனை ஆத்மகாரகன் உயிர்காரகன் என்கிறோம்.ஒரு மனிதனின் ஆயுள் முடிந்தவுடன் அம் மனிதனின் உயிர் அதாவது ஆத்மா பிரிந்து சென்றுவிடும்.
எஞ்சி இருப்பது அந்த
மனிதனின் கர்மவினையே அதனால் தான் துலாமில் சனி உச்சமடைகிறார்.

சூரியன் நீச்சம் உயிர் பிரிகிறது.சனி உச்சம் கர்மா வலுப்பெறுகிறது. உயிர் போனாலும் ஒருவரின் கர்மவினை அவரின் பாவ புண்ணியத்திற்கு தக்கவாறு மீண்டும் பிறவி எடுக்கும் என்பதை தெளிவாக உணர்த்தவே ஏழாம் இடம் என்னும் இல்லற பாவத்தில் மீண்டும் தாம்பத்தியம் துவங்குகிறது.ஆக பிறவிக்கு வித்திடும் பாவம் ஏழாம் பாவம்.ஏழாம் பாவகத்தை அஸ்தமனம் என்றும் லக்கினத்தை உதயம் என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. எந்த இடத்தில் உயிர் பிரிகிறதோ அதே இடத்தில் உயிரை தோற்றுவிக்க ஆண் பெண் இல்லற சுகத்தை வைத்தது இறைவன் திருவிளையாடல் என்றே கூற வேண்டும்.

முடிவு என்று எங்கு உள்ளதோ அங்கேயே அதன் உதயமும் தோன்ற வித்திடுவது ஏழாம் பாவமே.இப்படிப்பட்ட சிறப்பு மிக்க துலாம் ராசி சித்திரை நட்சத்திரத்தில் அவதரித்த சித்திர குப்தரே மானுட உலகின் பாவபுண்ணிய கணக்கை துல்லியமாக கணக்கிட்டு காட்டும் உயர்நீதி மன்ற நீதிபதியாவர்.

எமதர்மராஜர்
★★★★★★★★
வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர் எமதர்மர். விசாக நட்சத்திரத்தின் 1 2 3 ஆம் பாதங்கள் துலாம் ராசியிலும்,
விசாகம் 4 ஆம் பாதம் விருச்சிக ராசியிலும் உள்ளது.
காலப்புருஷ ராசியின் ஏழாம் பாவம் துலாம்.ஏழாம் பாவத்தை நாம் மாரக பாவம் என்றும், எட்டாம் பாவமான விருச்சிகம் ஆயுள் பாவம் என்று அறிவோம்.பொதுவாக விசாக நட்சத்திரம் உடைந்த நட்சத்திரங்களில் தலையற்ற நட்சத்திரமாகும்.எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம். ஒருவருக்கு தலையின் செயல்பாடுகள் நின்று விட்டால் அவருக்கு ஆயுள் முடிந்துவிட்டது என்கிறோம்.

எமதர்மர் அதனால் தான் தலையற்ற நட்சத்திரத்தில் அவதரித்துள்ளார் என எண்ண தோன்றுகிறது.
ஆயுள் முடிந்தவர்களை தன் பாசக்கயிற்றால் இழுத்து செல்வதற்காகவே விசாக நட்சத்திரத்தில் அவதரித்துள்ளார்.

விருச்சிக ராசி காலப்
புருஷனுக்கு ஆயுள் பாவம். அதில் நீச்சமாகும் கிரகம் சந்திரன். சந்திரனை உடல் காரகன் என்கிறோம்.
உடல் தன் செயல்பாட்டை நிறுத்திவிட்டால் ஆயுள் பிரிந்துவிட்டது என்கிறோம்.
விருச்சிகத்தில் சந்திரன் 3 டிகிரியில் நீச்சமடைவதும், அதுவும் விசாகம் 4ம் பாதத்தில் நீச்சமடைவதும் இந்த நீச்சமான பூத உடலையும் உயிரையும் கைப்பற்ற விசாக நட்சத்திரத்தில் அவதரித்த எமதர்மராஜாவே வருவது தான் இறை தன் கடமையை செவ்வனே செய்கிறது என்பதை அற்புதமாக உணரச் செய்துள்ளது.

உயர்நீதிமன்ற நீதிபதி சித்திரகுப்தர் என்றால் உச்ச நீதிமன்ற நீதிபதி எமதர்மரே.
பூலோக நீதிபதிகளின் தீர்ப்பு மாற்றி எழுதப்பட்டாலும்
மேலோக நீதிபதிகளின் தீர்ப்பில் இருந்து யாவரும் தப்பிக்கவே முடியாது.

சித்திரகுப்தர் உடலற்ற நட்சத்திரமான சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர் .
உடலை பூலோகத்தில் விட்டுவரும் மனிதர்களின் கர்மகணக்கை துல்லியமாக எழுதிவைப்பவர் உடலற்ற நட்சத்திரத்தில் அவதரித்த சித்திரகுப்தரே.

உடலற்ற நட்சத்திரமான
சித்திரையில் பிறந்த சித்திரகுப்தர் உடலின் கர்ம கணக்கையும்,
தலையற்ற நட்சத்திரமான விசாகத்தில் பிறந்த எமதர்மர் ஒரு மனிதனின் உயிர் கணக்கையும் (ஆயுளையும் ) துல்லியமாக நிர்ணயம் செய்யவல்லவர்கள்
என்பதை உணரலாம்.

உடலும் உயிரும் அற்றவர்களால் தான் உடலைப்பற்றியும் உயிரைப்பற்றியும் கணக்கிட முடியும் என்பதற்கு இதுவே சாட்சி. உடைந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முன் ஜென்மவாசனையும்,சூட்சும உலகைப்பற்றிய அறிவும் நிச்சயம் அறிந்திருப்பார்கள்.
ஆவிலோக தொடர்பு கொண்டு பேசுபவர்களும் நிச்சயம் இந்த உடலற்ற நட்சத்திரத்தில் பிறந்தவர்களாக தான் இருப்பார்கள்.

நம் முன்னோர்கள் சித்திரகுப்தரையும் எமதர்மரை பற்றியும்
இந்து மதத்தில் புராண வாயிலாக கூறியுள்ளார்கள் என்றாலும் அவை ஜோதிடத்துடன் ஒப்பிட்டு வருவது ஜோதிடம் வேதத்தின் கண்ணாக செயல்புரிகிறது என்பதை தெள்ளத்தெளிவாக அறியலாம்.

நன்றி

அன்புடன்
அஸ்ட்ரோ சக்திகுரு
நாமக்கல்

முதலாளியின் கதை :

ஒரு ஓட்டல் முதலாளியின் கதை :

தன்னுடைய கடையில் சேரும் முருகனான என்னை அவர் ஒரு நிபந்தனையுடன் சேர்த்து கொள்கிறார் .

அத்தியாவசியம் தவிர வேறு எந்த செலவுக்கும் நீ காசு கேட்க கூடாது என கண்டித்து சொன்னார்.

உனக்கு தேவையான நேரத்தில் நானே மொத்தமாக கொடுப்பேன் என்றும் சொன்னார்.

பசியால் வாடி வதங்கியிருந்த அவனுக்கு அப்பொழுது உணவு மட்டுமே தேவையாயிருந்தது .

அவனும் சரியன்று ஒத்துக்கொண்டான்.

அதற்கு பிறகு அவன் தன்னை முழுமையாக வேலையில் ஈடுபடுத்திக் கொண்டான் .

அந்த முருக பவனை தனது பவனாக நினைத்து முழுமையாக உழைத்தான்.

இடையில் ஊருக்கு போகவேண்டும் என்று அவன் எவ்வளவு பணம் கேட்டும் அவர் தரவில்லை .

ஒருவேளை சோறு போடக் கூட வழியின்றி உன்னை விரட்டியடித்த ஊருக்கு நீ ஏன் செல்கிறாய் என்று அவனை அடக்கி அமைதியாக இருக்க வைத்தார்.

சில வருடங்கள் ஓடியது .
அவனுக்கும் அவரின் அன்பும் கண்டிப்பும் பிடித்துப் போனது .

எதைப்பற்றியும் கேட்பதில்லை.

கடையில் இருந்த மற்ற ஊழியர்கள் அவனை பெண் பார்க்க அழைத்துச் சென்றார்கள் ,சில விடுமுறை தினங்களில் ….முதலாளிக்கு தெரியாமல்….

ஓட்டல் கடையில் வேலை செய்பவருக்கு பெண்ணை தர முடியாது என்று பல இடங்களில் மறுத்துவிட்டனர் .

அதை எல்லாம் முதலாளி கண்டும் காணாமலும் இருந்தார் .
அவனை ஏதும் கேட்கவும் இல்லை. அவன் மேல் பரிதாபப்படவும் இல்லை.

இன்றோடு வேலைக்கு சேர்ந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது .

ஒரு நாள் முதலாளி அவனை அழைத்தார்.
அதிக ஓட்டல் இல்லாத ,ஆனால் பரபரப்பு நிறைந்த ஒரு இடத்திற்குக் கூட்டிச் சென்று புதிய கடையை பார்த்தார் .

முருகா இந்த இடத்தில் கடையை வைத்தால் ஓடுமா என்று என்னிடம் கேட்டார் ..

நானும் ஆமாங்க முதலாளி இந்த இடம் நல்ல இடம் நல்ல வியாபாரம் ஆகும் என்றேன் .

கடைக்கு முன் பணம் கொடுத்தார் .

அந்த கடைக்கு தேவையான எல்லாத் தட்டு முட்டு சாமான்களையும் வாங்குதற்கு என்னையே அனுப்பி வைத்தார் .

என்னோடு இணக்கமாக இருந்த சக தோழர்களையும் என்னோடு பணிக்கு ஒத்தாசை செய்யச் சொன்னார்.

கடை ஆரம்பமாக நாள் குறிக்கப்பட்டது. ஐந்து நாள் முன் அவர் என்னை அழைத்தார் .

கடை வேலை எல்லாம் சரியாக செல்கிறதா முருகா என கேட்டார்.

பின்னர் கடை சாவியை என்னிடம் கொடுத்து ,
நீதான் முருகா கடைக்கு சொந்தக்காரன் என்றார் .

முதலாளி என்ன இது திடீரென்று இப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டேன்.

உன்னுடைய பணம்தான் முருகா …

அதில் எனது பங்கும் கொஞ்சம் இருக்கிறது. அது உன் மேல் நான் வைத்திருக்கும் அன்பின் சிறிது சன்மானம் அவ்வளவே…

நீ உன்னுடைய உறவுக்காரர்களை கடை திறப்பு விழாவிற்கு தற்பொழுது அழைத்து உபசரி….

பிறகு தானாக எல்லாம் நடக்கும் என்றார்.

அப்படியே கடை திறப்பு விழாவும் தடபுடலாக இருந்தது .

சாப்பாடு போடாமல் விரட்டியடித்த உறவினர்கள் கடை அருமை, சாப்பாடும் அருமை என சொன்னார்கள் .

பிறகு எனது தூரத்து மாமா ,வசதியான மாமா அவர்களே தனது பெண்ணை அளிக்க முன்வந்தார் .

பிறகு எனது முதலாளியின் தலைமையில் மாமா பெண்ணை திருமணம் செய்து மிகவும் வசதியாக வாழ்ந்து வருகிறேன் .

ஆனால் அவர் சொன்ன ஒரு தாரக மந்திரம் அது இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது .

அதை நான் இன்று வரை கடைப்பிடித்து வருகிறேன்

உனக்காக மட்டும் வாழாதே….
உன்னை நம்பி இருக்கும் அனைவரையும் வாழ வை ….

என்றதை இன்றுவரை நான் கடைபிடித்து வருகிறேன் .

அவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட உறவினர்களை காட்டிலும் ,
அவரால் வளர்த்துக் உருவாக்கப்பட்ட மனிதர்களின் அழுகையே அதிகமாக இருந்தது என்னையும் சேர்த்து ….

சில மனிதர்களின் சாதனைகள் வெளியில் தெரிவதில்லை ஆனால் அவர்களது இறுதி ஊர்வலத்தில் தெரியும் என்ற உண்மையை உணர்ந்து கொண்டேன் எனது முதலாளி இறுதி ஊர்வலத்தில்…..

கொடுங்கள்… பெறுவீர்கள்!….

கொடுங்கள்.. பெறுவீர்கள்!….
=====================
பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்க தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்த பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக் கொண்டு இருந்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. கால்களை நகர்த்தவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.
அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப் செட்டும் அருகே ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். “ஜக்கில் உள்ள தண்ணீரை அந்த பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்.”
அந்த பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது. அந்த தண்ணீர் ஊற்றினால் அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.
அந்தப் பயணி யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்த பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது. இனி தன்னைப் போல தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போக தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது. அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்த தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் இரண்டு படிப்பினைகள் உள்ளன.

1) ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்த கால கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது. “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?
அந்தப் பயணிக்கு கடைசியில் ஒரு மனநிறைவு இருந்ததே அது தான் மிகப்பெரிய பரிசு. விருது. நல்லது அல்லாததைச் செய்ய சந்தர்ப்பம் இருந்தும் அதைச் செய்யாமல் நல்லதைச் செய்து முடிக்கையில் தானாக வரும் ஆத்மதிருப்தியை விடப் பெரிய சபாஷ், கைதட்டல், விருது ஏதாவது இருக்கிறதா? இப்படி ஆத்மதிருப்தியைத் தரும் செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனிதன் தானும் உயர்ந்து, தன்னைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்துகிறான்.

2) அடுத்த படிப்பினை நாம் நம் வாழ்க்கையிலும் கொடுத்தால் தான் பெற முடியும். இது பிரபஞ்ச விதி. இன்னும் சொல்லப் போனால் கொடுத்ததை மட்டுமே பெற முடியும். ஆனால் அதை கொடுத்த அளவைக் காட்டிலும் பன்மடங்காகப் பெறுகிறோம். மேலே சொன்ன பயணி ஊற்றிய தண்ணீரை விடப் பலமடங்கு தண்ணீரைப் பெற்று அனுபவித்து, முதலில் இருந்த அளவு நீரை எடுத்தும் வைக்கிறான். அவனைப் போல் நமக்கும் கொடுத்து விட்டால் இருந்ததையும் இழந்து விடுவோமே என்று சந்தேகம் தோன்றலாம். ஆனால் அந்த சந்தேகம் உண்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அந்த சந்தேகத்தோடு தர மறுக்கையில் நமக்கு வருவதையும் அடைத்து வைக்கிறோம்.
எனவே எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள். செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகி திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்.