உலகியல் ஜோதிடம்

உலகியல் ஜோதிடம்
==================

உலகியல் ஜோதிட பலன் காணும் போது 12 பாவகங்களை பிரித்து தெரிந்துகொண்டால் பலன் காண்பது கொஞ்சம் எளிதான ஒன்றாக இருக்கும் .

முதல் பாவகம்
=============

நாட்டின் முக்கிய பிரமுகர்கள், நாட்டின் சுய கௌரவம், அதிகாரம், கௌரவமான நடத்தைகள். மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருத்தல், முன்னெச்சரிக்கைகள் .

இரண்டாம் பாவகம்
=================

ஒரு நாட்டின் செல்வங்கள், நிதித்துறை, அரசாங்கத்தின் உத்தரவுகள், அரசாங்கத்தின் வாக்குறுதிகள்.

மூன்றாம் பாவகம்
================

ஒருநாட்டின் அரசாங்கத்தின் பத்திரங்கள், அரசாங்கத்தின் கடிதங்கள், தகவல் தொடர்புத்துறை , போக்குவரத்துத்துறை.

நான்காம் பாவகம்
================

நாட்டு அரசாங்கத்தின் கட்டிடங்கள், கல்வித்துறை ,அரசாங்க அலுவலகங்கள், ஏரி, குளம் ,குட்டைகள், கிணறுகள். அரசாங்க அலுவலக வளாகங்கள்.

ஐந்தாம் பாவகம்
===============

ஒரு நாட்டின் விளையாட்டுத்துறை , கலைத்துறை, சுற்றுலாத்துறை, அரசாங்கம் நடத்தும் நிகழ்ச்சிகள் .

ஆறாம் பாவகம்
==============

நாட்டின் கடன், வழக்குகள், அரசாங்க பணியாளர்கள், எதிரிகள் , மருத்துவத்துறை, வேலைவாய்ப்பு அலுவலகங்கள்.

ஏழாம் பாவகம்
=============

நீதித்துறை, பொதுநலத்துறை, நட்புறவு கொள்பவர்கள், மக்கள் நல மேம்பாட்டுத்துறை.

எட்டாம் பாவகம்
==============

அரசாங்கத்தின் சொத்துகள் திருடப்படுதல், நிலுவையில் உள்ள நீண்டகால வழக்குகள்,பெரும் தலைவர்களின் இழப்புகள், பெரிய விபத்துகள்,சேதங்கள், கட்டுப்படுத்த முடியாத நோய்கள், அரசாங்க தண்டனைகள், அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள், மறைமுக எதிரிகள் , அச்சுறுத்தல்கள்.

ஒன்பதாம் பாவகம்
================

அரசாங்க வங்கிகள், அறநிலையத்துறை, பல்கலை கழகங்கள், வெளிநாட்டு தூதரகங்கள், கோவில்கள், ஆயுதக் கிடங்குகள், ராணுவம்.

பத்தாம் பாவகம்
==============

நாட்டிற்கு பாராட்டு கிடைத்தல், வேலை வாய்ப்புத்துறைகள், வணிக வளாகங்கள், உயர் விருதுகள், வெற்றிச்சின்னங்கள், கனிம வளங்கள்.

பதினொன்றாம் பாவகம்
=====================

அரசாங்க உதவிகள், நினைவுச் சின்னங்கள், வணிக வரிகளின் முலம் லாபம் கிடைத்தல், அதிசயமான பொருட்கள், நாட்டு மக்களின் மகிழ்ச்சி.

பனிரண்டாம் பாவகம்
===================

அரசாங்க மருத்துவமனைகள், உளவுத்துறை, பட்ஜெட் ,ஜெயில் பூங்காக்கள், நாட்டின் எல்லைகள்.

தொடரும்…….

ஜோதிடர் & ஜோதிட ஆராய்ச்சியாளர்
சிவகாளீஸ்வரன்
7418796879.

ஜோதிட சிந்தனை

ஜோதிட சிந்தனை
================

சந்தை
======

கால புருசதத்துவப்படி ஏழாமிடமான துலாம் ராசி சந்தையை குறிக்கும். துலாம் ராசியின் குறியீடு தராசு .துலா ராசியில் சுக்கிரன் ஆட்சி பெறுகின்றது. சனி உச்சம் அடைகின்றது. சூரியனின் நீச்சம் அடைகின்றது.

துலாம் ராசியின் குறியீடான தராசு அங்குள்ள அனைத்துகடைகளிலும் இருக்கும்.

சுக்கிரனின் ஆட்சிவீடாக துலாம் இருப்பதால் சந்தைக்கு வருகின்றவர்களில் பெண்மணிகளே அதிகம் வருகின்றார்கள். அங்கு வியாபாரம் செய்யும் அனைவருக்கும் வியாபாரம் நன்றாக நடைபெறுகின்றது. . சுக்கிரனின் காரகங்களான ஆடை அலங்காரப்பொருட்களை சந்தையில் வாங்கும் வழக்கம் மக்களிடையே உள்ளது.

உச்சம் அடைந்த சனியினால் மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது. மக்கள் கூட்டத்தை குறிப்பவர் சனியாவார். சந்தைக்கு வருகின்ற மக்களில் ஏழை எளிய மக்களே அதிகம். ஏழை எளிய மக்களை குறிப்பவர் சனியாவார்.
மேலும் சனிகிரகம் வயது முதிர்ந்தவர்களையும் குறிக்கும். வயதான மூதாட்டிகளும் சந்தையில் வியாபாரம் செய்வதை காணமுடிகின்றது.சந்தைக்கு சென்று செருப்பு வாங்கும் வழக்கம் உள்ளது. செருப்பு சனியின் காரகமாகும்.

சூரியனின் நீட்சவீடு துலாம் எனவே நிழல்பாங்கிற்காக சந்தை முழுவதும் கூடாரத்தினால் மூடியுள்ளனர். மேலும் மரநிழலிலும் கடைகளை வைத்து வியாபாரம் செய்கின்றனர். மேலும் சூரியன் அஸ்தமித்த இரவு நேரத்திலேதான் அதிகமாக வியாபாரம் நடைபெறுகின்றது.

ஜோதிடர் & ஜோதிட ஆராய்ச்சியாளர்
சிவகாளீஸ்வரன்
7418796879
நன்றி.

பரிகார திருத்தலங்கள்

பரிகார திருத்தலங்கள்
===================

சிம்ம லக்கினம் , கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு நவகிரக தோசத்தால் திருமணம் நடைபெற தாமதமானால்
திருச்சி மலைக்கோட்டையில் உள்ள தாயுமானவர் கோவிலுக்கு சென்று விரைவில் திருமணமாகவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுங்கள் மிகவிரைவில் திருமணம் நடைபெறும்.

திருச்சி மலைக்கோட்டையிலுள்ள தாயுமானவர் சன்னதியில் நவகிரகங்களில் எட்டு பேர்களும் சூரியனை பார்த்தபடி அமர்ந்திருக்கின்றார்கள். சூரியபகவானுக்கும் உஷா தேவிக்கும் இங்கு திருமணம் நடைபெற்றதாக ஐதீகம் உள்ளது. மற்ற கிரகங்கள் சூரியனின் திருமண கோலத்தை பார்ப்பதாக ஐதீகம் உள்ளது.
சூரியனும் உஷாதேவியுடன் காட்சி தருகின்றார்.

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்கினாதிபதி சூரியன். கும்பலக்கினத்திற்கு ஏழுக்குடையவன் சூரியன் . எனவே சூரியனின் திருமணம் நடைபெற்ற இடமான தாயுமானவர் சன்னதிக்கு சென்று பிரார்த்தனை செய்தால் மற்ற கிரகங்களின் ஆசிகளின் மூலம் விரைவில் திருமணம் நடைபெறும்.

தாயுமானவர் சன்னதியில் சென்று பிரார்த்தனை செய்யும்போது சூரியனின் திருமணத்தை உருவகப்படுத்தி பார்க்கவும்.
மனோபாவம் மிகவும் முக்கியம்.

ஜோதிடர் & ஜோதிட ஆராய்ச்சியாளர்
சிவகாளீஸ்வரன்
7418796879
நன்றி.

​ஆருட ஜோதிடம் நம்பகமானதா?

ஆருட ஜோதிடம் நம்பகமானதா?

மகாபாரதத்தில் கௌரவர்கள் விதித்த நிபந்தனைப்படி, சூதாடித் தோற்ற பாண்டவர்கள், 12 வருட வனவாசமும், ஓராண்டு விராட நாட்டில் அஞ்ஞாத வாசமும் முடித்த பின்பு, சூதாட்ட நிபந்தனைப்படி, தாங்கள் இழந்த ராஜ்ஜியத்தையும், அரசு உரிமையையும் பெற விரும்பினார்கள். உறவையும், நட்பையும், அமைதியையும் பெரிதும் விரும்பிய யுதிஷ்டிரன், தங்கள் கோரிக்கைகளை துரியோதனனுக்கு எடுத்துக் கூறி, தங்கள் ராஜ்ஜிய பாகத்தைப் பெற, பொறுப்பும் திறமையும் மிக்க ஒருவரை ராஜதூதனாக அனுப்ப விரும்பினான். அவன் அறிவுக்கு எட்டியவரையில், பகவான் ஸ்ரீகிருஷ்ணனைத் தவிர, வேறு எவரும் இதற்குத் தகுதியுடையவர்களாகப்படவில்லை.

எனவே, ஸ்ரீகிருஷ்ணனை அழைத்து தன் கருத்தைச் சொன்னான்.

”தம்பிமார்கள் கோபமாக இருக்கின்றனர். பட்ட துயரங்களுக்கெல்லாம் காரணமானவர்களைப் பழிவாங்கத் துடிக்கிறார்கள். எப்படியாவது போர் தொடுத்து, கௌரவர்களை அழித்து, தர்ம ராஜ்ஜியம் ஸ்தாபிக்க வேண்டும் என்று பீமனும் அர்ஜுனனும் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால் நானோ, அமைதியையும் சமாதானத்தையும்தான் விரும்புகிறேன். துரியோதனனிடம் பாண்டவர் தூதுவனாக நீ செல். நிபந்தனைப்படி எங்களுக்குச் சேர வேண்டிய ராஜ்ஜியத்தைக் கேள். பாதி ராஜ்ஜியம் தர மறுத்தால், நமக்கென ஐந்து சிறிய நாடுகள் கேள். அதுவும் இல்லை யென்றால், ஐந்து ஊர்களைக் கேள். அதையும் அவர்கள் தர மறுத்தால், ஐந்து இல்லங்களையாவது கேள். எப்படியும் அதையாவது கேட்டு வாங்கி, போர் வராமல் தடுத்து, தர்மத்தை நிலைநாட்டு” என்றான் தர்மன்.
”யுதிஷ்டிரா, நிச்சயம் தர்மத்தை நிலைநாட்ட என்னால் ஆனதைச் செய்கிறேன். உங்களுக்காகத் தூது போய், நீ கூறியபடி, ஐந்து வீடுகளாவது யாசகம் கேட்டுப் பார்க்கிறேன். எதற்கும் தம்பிகளிடமும் திரௌபதியிடமும் கலந்தாலோசித்து, அவர்கள் அபிப்ராயங்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டு விடைபெற்றுச் செல்கிறேன்” என்று கூறி, பீமார்ஜுனர்களைக் காணப் புறப்பட்டான் கண்ணன்.
பீமன், ராஜ்ஜியத்தை யாசகம் கேட்டுப் பெறுவதை விரும்பவில்லை. சூதாட்ட மண்டபத்தில் தான் செய்த சபதம் நிறைவேற, போர் வந்தே ஆக வேண்டும் என அவன் கர்ஜித்தான். அதே கருத்தை கண்ணனிடம் அடக்கமாகத் தெரிவித்தான் அர்ஜுனன். அதன்பின் திரௌபதியையும் நகுலனையும் சந்தித்தான் கண்ணன்.
”அண்ணா, நீ தூது போவது தர்மமா? அதுவும் ஐந்து வீடுகள் யாசகமாகக் கேட்கப் போகிறாயாமே! அதை அவர்கள் தர சம்மதித்துவிட்டால், அவிழ்ந்த என் கூந்தல் முடிவது எப்போது? உன் மீது ஆணையாக நாங்கள் செய்த சபதங்கள் என்னாவது?” எனக் கண்ணீர் வடித்தாள் திரௌபதி. நகுலனும் தர்மனின் எண்ணத்துக்கு உடன்படவில்லை.
”பாஞ்சாலி, நீங்கள் அனைவரும் என் மீது ஆணையிட்டுத்தான் சபதங்கள் செய்திருக்கிறீர்கள். அதை நிறைவேற்று வதில் உங்களைவிட என் பொறுப்புதான் அதிகம். அவை நிச்சயம் நிறைவேறும். எப்படி என்று மட்டும் இப்போது கேட்காதே! நம்பிக்கையோடு பொறுத்திரு. நான் ஸஹதேவனைக் கண்டுவிட்டு, நாளை ஹஸ்தினாபுரம் புறப்படுகிறேன்.” எனக் கூறி, ஸஹதேவன் குடில் நோக்கிப் புறப்பட்டான் கண்ணன்.
அங்கே, அமைதியாக ஜோதிடச் சுவடிகளை ஆராய்ந்து கொண்டிருந்த ஸஹதேவன், கண்ணனைக் கண்டதும் பணிந்து, வரவேற்றான்.
”ஸஹதேவா, இந்த உலகில் அமைதியை நிலைநாட்டுவதற்காக, நான் நாளை ஹஸ்தினாபுரம் செல்கிறேன். அதற்காக எல்லா உபாயங்களையும் கையாளப் போகிறேன். நீ சாஸ்திர வல்லுநன்; சிறந்த அறிவாளி. அமைதியை விரும்புபவன். போரைத் தடுக்க ஏதாவது வழியிருக்கிறதா, சொல்… அதையும் முயன்று பார்க்கிறேன்” என்றான் கண்ண பிரான். ஸஹதேவன் சிரித்தான். ”போர் வராமல் தடுக்கத்தானே உபாயம் தேடுகிறாய்! நல்லதொரு உபாயம் உண்டு. சொல்கிறேன். செய்ய முடியுமா, பார்?” என்று ஆரம்பித்தான் ஸஹதேவன்.
தர்மத்தை நிலைநாட்ட ஒரு குருக்ஷேத்திரப் போரை உருவாக்கவே, கண்ணன் தூது செல்கிறான் என்பதை, அவனது ஆரூட சாஸ்திர அறிவால் ஊகிக்க முடிந்தது. அதனால், அவன் வேடிக்கையான வழி ஒன்றைச் சொன்னான்.
”கண்ணா, கேள்… பீமன் கையில் உள்ள கதையை முறித்து, அர்ஜுனன் வில்லை ஒடித்து, பாஞ்சாலி கூந்தலை அறுத்துவிட்டு, கர்ணனுக்கு முடிசூட்டிவிட்டு, எல்லாவற்றுக்கும் மேலாக, நீ அஸ்தினாபுரத்துக்கு தூது போக முடியாமல் நான் உன்னைக் கட்டிப்போட்டால், போரை நிச்சயம் தடுக்கலாம்” என்றான் ஸஹதேவன்.

கண்ணன் உரக்கச் சிரித்தான்.
”என்னைக் கட்டுவதா? எப்படி முடியும் ஸஹதேவா?” என்றான். ”ஏன் முடியாது?” என்று எதிர் சவால் விட்டான் ஸஹதேவன். அந்தக் கணமே, பல்லாயிரம் கண்ணனாக வடிவெடுத்து மண்டபம் எங்கும் வியாபித்தான் ஸ்ரீகிருஷ்ணன். பார்த்த பரவெளியெல்லாம் கிருஷ்ணனாகத் தோன்றியது. இத்தனைப் பரிமாணங்களையும் எப்படிக் கட்டுவது?

ஸஹதேவன் கலங்கவில்லை. பத்மாசனத்தில் அமர்ந்தான். கண்களை மூடினான். பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் ரூப, குண, நாமங்களை மனதில் தீவிரமாகத் தியானித்தான். பக்திப் பரவச நிலையில் கண்ணனின் புகழை, அவன் நா ஒலித்தது. அப்போது பிறந்தது ஸஹதேவன் இயற்றிய கிருஷ்ண மந்திரம்.
‘ஓம் நமோ விஸ்வரூபாய விஸ்வ சித்யந்த ஹேதவே

விஸ்வேஸ்வராய விஸ்வாய கோவிந்தாய நமோ நமஹ

நமோ விக்ஞான ரூபாய பரமானந்த ரூபினே

கிருஷ்ணாய கோபிநாதாய கோவிந்தாய நமோ நமஹ!’
என்பதே அந்த மந்திரம். ஸஹதேவன் மந்திரத்தை உச்சரிக்க உச்சரிக்க, கண்ணன் எடுத்த வடிவங்கள் ஒவ்வொன்றாய்க் கலந்து, ஒன்றோடொன்று இணைந்து ஒரே கண்ணனாகி, அவனும் ஸஹதேவனின் இதயத்துக்குள்ளே கட்டுண்டான். ”ஸஹதேவா, நீ வென்றுவிட்டாய்! என் தாய் என்னை உரலில் கட்டினாள். பிருந்தாவன கோபியர், கட்டுத்தறியில் கட்டினார்கள். நீயோ இதயத்தில் கட்டிவிட்டாய். பக்தியினால் கடவுளையும் கட்ட முடியும் என்று காட்டிவிட்டாய். போதும்! என் கட்டுக்களை அவிழ்த்து, என்னைப் போக விடு!” என்று கூறினான் கண்ணன்.
இப்போது ஸஹதேவன் பேரம் பேசினான். ”கட்டுக்களை அவிழ்த்துவிடுவதானால், எனக்கு ஒரு வரம் கொடு” என்றான். ”கேள், தருகிறேன்” என்றான் கண்ணன். ”பாரதப் போரில் குந்தி புத்திரர்களான எங்கள் ஐவரையும் காப்பாற்றுவதாக வரம் கொடு” என்றான் ஸஹதேவன்.

கண்ணன் மீண்டும் உரக்கச் சிரித்தான். ”ஸஹ தேவா! சற்று அவகாசம் தருகிறேன். ஏதாவது விட்டுப் போயிருந்தால், அதையும் வரத்தில் சேர்த்துக் கொண்டு வாசகங்களைச் சரியாக அமைத்து வரத்தை மீண்டும் கேள், தருகிறேன்” என்றான் கண்ணன்.
”இல்லை கிருஷ்ணா! நீ என்னைக் குழப்பப் பார்க்கிறாய். நான் கேட்டது கேட்டதுதான். பாரதப் போரில் குந்தி புத்திரர்கள் எங்கள் ஐவரையும் எப்படியாவது காப்பாற்றிவிடு!” என்றான். ”நல்லது ஸஹதேவா. வரம் மட்டுமல்ல. வாக்கும் அளிக்கிறேன். பாரதப் போரில் குந்தி புத்திரர்கள் உங்கள் ஐவரையும் காப்பாற்றுகிறேன். என்னைக் கட்டவிழ்த்து விடு” என்றான் கண்ணன். ஸஹதேவன் தியான நிலையைக் கலைத்து கண்ணனைக் கட்டவிழ்த்தான்.
கர்ணனோடு சேர்ந்து குந்திக்கு ஆறு புதல்வர்கள் என்பதை அறியாமல், ‘குந்தி புத்திரர்கள் ஐவரை மட்டும் காப்பாற்று’ என வரம் கேட்டுவிட்டானே ஸஹதேவன். பாவம், கர்ணனைக் காப்பாற்ற இவனும் தவறிவிட்டானே! விதி யாரை விட்டது!” என்று எண்ணிக் கொண்டே கண்ணன் ஹஸ்தினாபுரப் பயணத்தை தொடங்கினான்.
கண்ணன் சங்கல்பப்படி, குருக்ஷேத்திரப் போர் தொடங்கியது. போரின் கடைசி நாட்களில் கர்ணனின் மரணம் நிகழ்ந்தது. அப்போது அவனுக்குக் கொடுத்த வாக்கின்படி யுத்த பூமியில் வந்து, தன் மகன் கர்ணனை மடி மீது கிடத்தி, ”மகனே” என்று கதறி அழுதாள் குந்தி. அப்போதுதான் பாண்டவர்களுக்கு, கர்ணன் தங்கள் சகோதரன் என்பது தெரிந்தது. அனைவரும் கதறினர். ஸஹதேவனின் நினைவலைகள் பின்னே சுழன்றன. கட்டுண்ட கண்ணனிடம் தான் கேட்ட வரமும், அப்போது அவன் தந்த வாய்ப்பும், தன் அறியாமையால் அந்த வாய்ப்பை இழந்து, ஐவரை மட்டுமே காப்பாற்ற தான் கேட்ட வரமும், அவன் நினைவுக்கு வந்தன. தான் கற்ற சாஸ்திர அறிவு தன்னைக் காப்பாற்றவில்லை என்பதை ஒரு கணம் உணர்ந்தான்.
”ஊருக்கெல்லாம் ஜோசியமும் ஆருடமும் சொல்ல உதவிய சாஸ்திரம், எனக்குக் கூடப் பிறந்த சகோதரன் இன்னொருவன் இருக்கிறான் என்பதைச் சுட்டிக் காட்டவில்லையே? இதனை நான் கணிக்கத் தவறிவிட்டேனே… இது மாயை. கண்ணன் காட்டும் வழி ஒன்றே மெய். அதுவே உயர்ந்த சாஸ்திரம். இனி எந்த சாஸ்திரமும் வேண்டாம்” என்று கோபத்தில் தன் ஜோதிடச் சுவடிகளை எல்லாம் கிழித்தெறிந்தான். அவற்றில் பல, போர்க்களத் தீயில் விழுந்து அழிந்தன. எஞ்சியவற்றை ஸஹதேவனின் சீடர்கள் எடுத்து, பல வருடங்கள் ஆராய்ச்சி செய்து, விட்டுப் போன பல விஷயங்களை ஊகத்தால் சேர்த்து, ஸஹதேவனின் ஜோதிட சாஸ்திரத்துக்கு மறு உயிர் தந்தார்கள். மறைந்தவை மறைந்தே போயின. அதனால்தான் இன்றும் ஆரூட ஜோஸ்ய சாஸ்திரத்தில் ‘ஜோஸ்யம் பாதி, ஹேஷ்யம் மீதி’ என்று சொல்கிறார்கள்!

​ஜோதிட பழமொழிகள்

​ஜோதிட பழமொழிகள்
 

பத்தில் குரு பதவிக்கு இடர்

இரவில் செய்தாலும் அரவில் செய்யாதே

பத்தில் பாம்பு இருந்தால் பணம் பறந்து வரும்

நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை

சனி பிடித்தவனுக்கு சந்தையிலும் கந்தை கிடைக்காது.

வைத்தியன் கையை பிடிப்பான் ஜோதிடன் காலை பிடிப்பான்

கன்னியில் செவ்வாய் கடலும் வற்றும்

ராசி இருக்கு தாசில் பண்ண அம்சம் இருக்கு கழுதை மேய்க்க

குரு பார்க்க கோடி நன்மை

கும்பத்து வெள்ளி குடம் கொண்டு சாய்க்கும்

மகத்துப் பெண் – பூரத்துப் புருஷன்

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது,

மேஷ ராகு மேன்மையை கொடுக்கும்

துலா கேது தொல்லை தீர்க்கும்

சித்திரையில் பிறந்தவன் தெருவில் திரிவான்

சுவாதி சுக்ரன் ஓயா மழை

மறைந்த புதன் நிறைந்த கல்வி

சித்திரை மாதம் செல்வன் பிறந்தால் சீரும் சிறப்பும் கெடும்

சித்திரை அப்பன் தெருவிலே

பத்தில் குரு வந்தால் பதவி பறி போகும்

விதி போகும் வழியே மதி போகும்.

அவிட்டம் , தவிட்டுப்பானையிலே பணம்

குரு கொடுப்பின் சனி தடுப்பார்; சனி கொடுப்பின் எவர் தடுப்பார்?

சனி பார்த்த இடம் பாழ்

சனி நீராடு

விழுப்பு இருக்குமிடத்தில் வேப்பிலைக்காரி தங்க மாட்டாள்.

ஓடிப் போனவனுக்கு ஒன்பதில் குரு

பருப்புக்கு போகாவிட்டாலும் நெருப்புக்கு போக வேண்டும்

எட்டில் சனி நீண்ட ஆயுள்

சனிபகவானைப் போன்று கெடுப்பாரும் இல்லை; கொடுப்பாரும் இல்லை

அகப்பட்டவனுக்கு அஷ்டத்தில் சனி

குரு நின்ற இடம் பாழ்

சனி பார்க்கும் இடம் பாழ்