இந்த 2015-ஆம் ஆண்டில் உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனி தொடருகிறது. இது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம்செலுத்துவது நல்லது. நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் உத்தமம். ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் கைகூடும். உற்றார்- உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமும், கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத வகையில் லாபமும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள். பொன், பொருள் சேர்க்கைகளும் அமையும். வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டுக்கு செல்லவிருப்பதால் பணவிஷயத்தில் சற்று கவனமுடனிருப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் ஆண்டின் பிற்பாதியில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யநினைக்கும் காரியங்களில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு குரு மாற்றத்திற்குப் பிறகு சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் வீண் அலைச்சல் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உங்களுக்கு ஏழரைச் சனி நடைபெறுவது தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துமென்றாலும் ஜூலை 5 வரை குரு 9-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். உயரதிகாரிகளின் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். எதிர்பார்த்த ஊதிய உயர்வுகளும் உண்டாகும். குரு மாற்றத்திற்குப்பின் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்து, அனைவரையும் அனுசரித்து நடப்பது, மற்றவர்களுக்கும் பணி நிமித்தமாக உதவிகளைச் செய்வது போன்றவை நற்பலனைத் தரும்.
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஆண்டின் தொடக்கமானது அற்புதமான நற்பலனை உண்டாக்கும். குரு 9-ல் இருப்பதால் வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் அனுகூலமான பலன்கள் அமையும். புதிய வாய்ப்புகளும் தேடிவரும். வங்கிக் கடன்களும் தீரும். குரு மாற்றத்திற்குப்பின் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யநினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தொழிலில் போட்டி, பொறாமைகளால் சற்று மந்த நிலை நிலவினாலும் பொருட்தேக்கம் ஏற்படாமல் சமாளித்து விடமுடியும்.